Skip to main content

சுடுகாட்டில் வைத்து இளைஞர் கொலை; தாம்பரத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம்

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Youth incident by cremation; Cruelty in a love affair

தனது தங்கையை காதலித்த இளைஞரை சகோதரர்கள் மூன்று பேர் சேர்ந்து சுடுகாட்டிலேயே வைத்து கொலை செய்த சம்பவம் தாம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை தாம்பரம் அடுத்துள்ள புதுபெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வேம்பு. இவருடைய மகன் ஜீவா. இவர் பேண்ட் வாசிக்கும் வேலை செய்து வந்தார். அதேபோல் கானா பாடல்களையும் பாடி வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் வசித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் ஜீவா பழகி வந்துள்ளார். நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. பெண்ணின் காதலை அறிந்துகொண்ட பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனைத் தெரிந்துகொண்ட இளைஞர் ஜீவா அப்பெண்ணுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவருக்கு பார்த்து வைத்திருந்த மாப்பிள்ளைக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி நண்பர்களை பார்ப்பதற்காக வெளியே சென்ற ஜீவா வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் குண்டுமேடு பகுதியில் உள்ள சுடுகாட்டில் இளைஞர் ஒருவர் படுகாயத்துடன் இறந்து கிடப்பது தெரியவந்தது. அந்த பகுதியில் நாய் ஒன்றும் உயிரிழந்து கிடந்தது.

அது ஜீவா என்று தெரியவர அவரது தந்தை வேம்பு பீர்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அங்கு சென்ற போலீசார் இளைஞர் ஜீவாவின் சடலத்தைக் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஜீவா காதலித்த இளம்பெண்ணின் சகோதரர்கள் அவரை கொலை செய்தது தெரிய வந்தது.

இளம் பெண்ணின் சகோதரர்கள் விஜய், அஜித், மணிகண்டன் ஆகிய மூன்று பேரும் ஜீவாவை சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. அந்த நேரத்தில் நாய் ஒன்று குரைத்ததால் நாயையும் அதே இடத்தில் கொன்றுவிட்டு மூன்று பேரும் தப்பி ஓடி உள்ளனர்.  மூன்று பேரையும் கைது செய்துள்ள போலீசார் தொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் விவகாரத்தில் இளைஞர் சுடுகாட்டில் வைத்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் தாம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்