Skip to main content

வட்டாட்சியர் காரை எறித்த இளைஞர் கைது! 

Published on 25/10/2021 | Edited on 25/10/2021

 

Youth arrested who damaged Dasildar car

 

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகம் கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. விடுமுறை நாளான நேற்று (24.10.2021) தாலுகா அலுவலகம் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த தாசில்தார் பயன்படுத்தும் கார், திடீரென தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. இதை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள், கண்டாச்சிபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். 

 

அத்தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி ஆய்வாளர் அன்பழகன் உள்ளிட்ட போலீசார், பொதுமக்கள் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். அந்தப் பகுதியில் கண்ணாடித் துகள்கள், சுத்தியல், ஒரு வாட்டர் கேன் ஆகியவை கிடந்துள்ளன. இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் தாலுகா அலுவலகத்தின் பின்பக்கம் சென்று பார்க்கும்போது, ஒரு நபர் அங்கிருந்து தப்பி ஓடுவது தெரிந்தது. அவரை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்த போலீசார், காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். 

 

மேலும், தாலுகா அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் போலீசார் ஆய்வுசெய்தனர். அதில், அந்த நபர் தாசில்தார் கார் கண்ணாடியை சுத்தியலால் உடைப்பதும், வாட்டர் கேனில் கொண்டு வந்த வார்னிசை ஊற்றி தாசில்தார் காருக்குத் தீ வைப்பதும் பதிவாகியிருந்தது. அதேசமயம், பிடிபட்ட நபர் கண்டாச்சிபுரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த 24 வயது ரஞ்சித் என்பது தெரியவந்தது. 

 

Youth arrested who damaged Dasildar car

 

இதுகுறித்து போலீசார் ரஞ்சித்திடம் நடத்திய விசாரணையில், “எனக்கு திருமணம் ஆகாத விரக்தியில் தாசில்தார் காருக்குத் தீ வைத்து எரித்தேன்” என்று வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், கடந்த வருடத்திற்கு முன்பு அதே தாலுக்கா அலுவலகத்தில் பதிமூன்று ஜன்னல் கண்ணாடிகளையும், தாசில்தார் கார் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தியதும் அவர்தான் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ரஞ்சித்தை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிவுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விழுப்புரம் சிறையில் அடைத்துள்ளனர். 

 

மேலும், ரஞ்சித் போலீசாரிடம் கூறும்போது “தாலுகா அலுவலகத்தில் அளவுக்கதிகமாக லஞ்சம் வாங்குகிறார்கள் உள்ளனர். அந்த கோபத்தில் இந்த செயலைச் செய்தேன்” என்று கூறியதாகவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கார் எரிக்கப்பட்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதான நபர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறுகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.