Skip to main content

அப்பாவி பெண்ணை ஏமாற்றிய வாலிபர்... உடனடியாக கைது செய்த காவல்துறையினர்!

Published on 26/07/2021 | Edited on 26/07/2021

 

The young man who cheated on the innocent girl ... The police arrested him immediately

 

காஞ்சிபுரம் மாவட்டம் திரிசூலம் சாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவரது மனைவி தனலட்சுமி. இவர் கடந்த மாதம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் நாட்டார் மங்கலம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு வந்தவர் கை செலவுக்குப் பணம் எடுப்பதற்காக அங்கு உள்ள இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையத்திற்குச் சென்றுள்ளார். தனலட்சுமிக்கு தனது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுக்க தெரியவில்லை. அதனால் அங்கிருந்த வாலிபரிடம் கார்டை கொடுத்து பணம் எடுத்துத் தருமாறு கூறியுள்ளார்.

 

அந்த நபர் ஏடிஎம் கார்டை போட்டுப் பார்த்துவிட்டு ஏடிஎம்மில் பணம் இல்லை என்று பொய் கூறி, அந்தக் கார்டை தனலட்சுமியிடம் திருப்பிக் கொடுத்துள்ளார். ஆனால் அன்று மாலை தனலட்சுமியின் செல்ஃபோனுக்கு அவரது வங்கிக் கணக்கில் இருந்து 51,000 பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அப்போதுதான் ஏடிஎம்மில் அவர் எடுத்து தருமாறு கொடுத்த ஏடிஎம் கார்டை மாற்றிக் கொடுத்து ஏமாற்றிப் பணம் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து தனலட்சுமி செஞ்சி காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தார். அவரது புகாரின் பேரில் டி.எஸ்.பி இளங்கோ மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சக்தி, சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் உள்ளிட்ட போலீசார் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

 

சம்பந்தப்பட்ட ஏடிஎம்மில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வுசெய்து, அதன்படி விசாரணை மேற்கொண்டனர். அதன்மூலம் செஞ்சி அருகில் உள்ள ரெட்டணை பகுதியைச் சேர்ந்த சோலை என்பவரது மகன், டிரைவராக வேலை பார்க்கும் அன்பு என்பவர் தனலட்சுமி கார்டை மாற்றிக் கொடுத்து, அவரது வங்கிக் கணக்கிலிருந்து 51 ஆயிரம் பணம் எடுத்ததைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து மோசடி ஆசாமி அன்புவை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். நீதிமன்றத்தின் மூலம் அன்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.