
பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் பேருந்திலேயே கைக்குழந்தையை தவிக்க விட்டுச் சென்ற சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் புறநகர் பேருந்து நிலையத்திற்கு வந்த பேருந்து ஒன்று பயணிகளை தேன்கனிக்கோட்டை அழைத்துச் செல்வதற்கு தயாராக இருந்தது. பேருந்தில் ஏற மக்கள் முண்டியடித்த நிலையில், சுமார் 2 வயது கைக்குழந்தையை வைத்திருந்த பெண் ஒருவர் பேருந்தில் ஏறி முன்சீட்டிலேயே இடம்பிடித்து உட்கார்ந்து கொண்டார். பின்னர் சிறிதுநேரம் கழித்து பேருந்து சீட்டிலேயே குழந்தையை விட்டுவிட்டு பின் பக்க வழியாக இறங்கிச் சென்றுவிட்டார். இந்த காட்சிகள் பேருந்து நிலையத்திலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து குழந்தை அழும் சத்தத்தைக் கேட்ட சக பயணிகள் இது தொடர்பாக நடத்துநரிடம் தெரிவித்தனர். பின்னர் அந்த குழந்தை தர்மபுரி பேருந்து நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை பெண் விட்டுச் செல்லும் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்துவரும் காவல் துறையினர், குழந்தையை தொப்பூரில் தமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைத்தனர்.