Skip to main content

ஏற்காடு கோடை விழா மே 26- ல் தொடக்கம்! ஒரு வாரம் நடத்த ஏற்பாடு!!

Published on 14/05/2022 | Edited on 14/05/2022

 

Yercaud Summer Festival starts on May 26! Arrange to hold a week !!

 

ஏற்காட்டில் கோடை விழா மே 26- ஆம் தேதி தொடங்குகிறது. ஒரு வாரம் இவ்விழா நடக்கிறது. 

 

சேலம் மாவட்டம், ஏற்காடு, தமிழ்நாட்டில் முக்கிய சுற்றுலா தலங்களுள் ஒன்றாகும். சேலம் மாநகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இருக்கிறது, ஏற்காடு. மலைகளின் இளவரசி, ஏழைகளின் ஊட்டி என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. சேர்வராயன் மலைத்தொடர்ச்சியான ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே, ஜூன் மாதங்களில் தமிழக அரசு சார்பில் கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி கொண்டாடப்பட்டு வருகிறது. 

 

கரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டாக கோடை விழா நடத்தப்படவில்லை. தற்போது கரோனா கட்டுக்குள் உள்ளதால், இந்தாண்டு வெகு சிறப்பாக கோடை விழாவை நடத்தத் தமிழக அரசு எல்லா விதமான ஏற்பாடுகளையும் விரிவாக செய்து வருகிறது. அதன்படி, ஏற்காட்டில் வரும் மே 26- ஆம் தேதி கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி தொடங்குகிறது. வழக்கமாக 3 அல்லது நான்கு நாள்கள் விழாவாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு ஒரு வார காலத்திற்கு விழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

 

இது தொடர்பாக சேலம் வந்த தமிழக நகராட்சிகள் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியது: ஏற்காட்டில் மே 26- ஆம் தேதி முதல் ஜூன் 1- ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இந்தாண்டு நடத்தப்பட உள்ள ஏற்காடு கோடை விழா சுற்றுலா பயணிகளை மிகவும் கவரும் வகையிலும், ஏற்காட்டினை மேம்படுத்தும் வகையிலும் மாவட்ட நிர்வாகம் மூலம் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 

 

ஏற்காடு அண்ணா பூங்காவில் அரிய வகையிலான 5 லட்சம் மலர்களைக் கொண்டு மலர்க்கண்காட்சி மற்றும் மாம்பழக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. விழாவையொட்டி, சேலத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சுற்றுலா பயணிகளுக்கு ஏற்காட்டின் முக்கிய இடங்களை ஒரு நாள் முழுவதும் சுற்றிக் காண்பிக்கும் வகையில் பேருந்து வசதி செய்யப்பட்டு உள்ளது. 

 

கோடை விழாவின்போது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வாகனங்கள் ஏற்காடுக்கு செல்லும்போது சேலம் - ஏற்காடு நெடுஞ்சாலை வழியாகவும், திரும்பிச் செல்லும்போது குப்பனூர் - சேலம் வழியாகவும் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. 

 

விழாவின்போது நாள்தோறும் கலை நிகழ்ச்சிகள், சுற்றுலா பயணிகள், செல்ல பிராணிகள் கலந்து கொள்ளும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். அரசின் சாதனைகளை விளக்கும் அரங்குகளும் அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.