Skip to main content

எழுத்தாளர் கி.ரா. மறைவு - தலைவர்கள் இரங்கல்!

Published on 18/05/2021 | Edited on 18/05/2021

 

writer rajanarayanan passed away in puducherry political leaders tributes

 

பிரபல எழுத்தாளர் கி.ரா. என்கிற கி. ராஜநாராயணன் (வயது 99) வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், எழுத்தாளர்கள், நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "கரிசல் குயில் பறந்தது; இடைசெவலில் மலர்ந்த ஒப்புவமை சொல்ல முடியாத புதுமையாளர் கி.ரா." என புகழாரம் சூட்டியுள்ளார்.

 

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழ் கதை இலக்கியத்தில் புதிய திசை வழியை உருவாக்கிக் கொடுத்த கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி.ரா." எனத் தெரிவித்துள்ளார்.

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கரிசல் என்னும் வட்டாரத்தை எழுதி பிரபஞ்ச உணர்வுகளைத் தொட்ட மகத்தான படைப்பாளி கி. ராஜநாராயணன் நம்மை நீங்கினார். அவருக்குப் புகழஞ்சலி" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "முதுபெரும் தமிழ் எழுத்தாளர், கரிசல் இலக்கியத்தின் பிதாமகர், பெரியவர் திரு. கி. ராஜநாராயணன் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். தமிழின் தனித்துவமான கதை சொல்லியாக, அழியாத படைப்புகளை தந்தவராக, நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாக திகழ்ந்த கி.ரா.வின் மறைவு தமிழுக்கு பேரிழப்பாகும். அன்னாரது மறைவால் வாடும் உறவினர்கள், நண்பர்கள், வாசகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழ் எழுத்துலகின் பீஷ்மர் எனப் போற்றப்படும் கி.ரா. மறைவு அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

திமுக எம்.பி. கனிமொழி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "எழுத்தாளர் கி.ரா.வின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும். தூத்துக்குடி மாவட்டம், இடைச்செவல் கிராமத்தில் பிறந்த அவர், கரிசல் மண்ணின் கதைகளை அவர்களின் மொழியில் எழுதியதுடன், கரிசல் வட்டார அகராதியைத் தொகுத்ததன் மூலம், வட்டார மொழிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திட உழைத்தவர்.

 

பழகுவதற்கு இனியவர். அவரை நான் பலமுறை சந்தித்தபோதெல்லாம் அவரது தெளிந்த சிந்தனையையும், நகைச்சுவை உணர்வையும் கண்டு வியந்திருக்கிறேன். சென்றமுறை பாண்டிச்சேரி சென்றபோது அவரையும் அவரது மனைவி கணவதி அம்மையாரையும் நேரில் சந்தித்து மகிழ்ந்தேன்.

 

இப்போது இருவருமே நம்மிடையே இல்லை. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

நடிகர் சிவக்குமார், "ஞானதந்தையை இழந்துவிட்டேன்; இலக்கிய ஆளுமை கி.ரா. மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” எஎன்று குறிப்பிட்டுள்ளார்.

 

அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் கி.ரா. என்கிற கி. ராஜநாராயணன் (99) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்." இவ்வாறு ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கொங்கு சீமையின் கொள்கை வேங்கையை இழந்துவிட்டேன்' - வைகோ இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'I have lost my  Kongu policy friend'-Vaiko's obituary

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாகத் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். என்ன காரணம் எனத் தெரியாத சூழலில் இதுகுறித்து விசாரித்தபோது அன்று காலை தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது 10.30 மணிக்கு தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

'I have lost my  Kongu policy friend'-Vaiko's obituary

மதிமுக எம்.பி.யின் மறைவுக்குப் பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், ‘அன்பு சகோதரரை இழந்துவிட்டேன். அன்புச் சகோதரர், கொங்கு சீமையின் கொள்கை காவலர் கணேசமூர்த்தியை இழந்துவிட்டேன். கொங்கு சீமையின் கொள்கை வேங்கை கணேசமூர்த்தி மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். கணேசமூர்த்தியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
lollu sabha actor seshu passed away

சின்னத்திரையில் பிரபல காமெடி நிகழ்ச்சியான லொள்ளு சபா மூலம் பிரமலமானவர் சேஷு. இதையடுத்து லொள்ளு சபா சேஷு, எனப் பெயர் பெற்றவர் பெரிய திரையிலும் அறிமுகமானார். சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, ஏ1, குலு குலு எனப் பல படங்களில் நடித்துள்ளார். 

சந்தானம் நடித்த ஏ1 படத்தில் இவர் பேசும் “அச்சசோ அவரா... பயங்கரமானவராச்சே அவர்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கப்பா” என்ற வசனம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது. மேலும் வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்திருந்தார். 

கடந்த 15ஆம் தேதி மாரடைப்பு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சேஷு. அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் சேஷூ உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார். அவரது இறுதிச் சடங்கு சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அவரது இல்லத்தில் நாளை காலை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.