Skip to main content

இறந்த தூய்மை பணியாளரின் ஓட்டை வீடு... கம்யூனிஸ்ட் எம்.பி. வேதனை

Published on 12/05/2020 | Edited on 12/05/2020



தூய்மை பணியாளராக பணி செய்து திடீர் மரணத்தை தழுவி, தான் ஒட்டிச் சென்ற குப்பை வண்டியிலேயே பிணமான உடலாக வந்த ஈரோடு மாவட்டம், நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி தினக்கூலி தூய்மை பணியாளர் பாலன் குடும்பத்திற்கு திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் இன்று நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.


ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சியில் கடந்த 13 ஆண்டுகளாக தினக்கூலி அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் என்.பாலன். 46 வயது கொண்ட அவர், சென்ற 6-5-2020 அன்று காலை பணியில் ஈடுபட்டிருந்தபோது மயங்கி விழுந்தார். உடனிருந்த சக தொழிலாளர்கள் அவரை குப்பை வண்டியில் ஏற்றி அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த மருத்துவ பணியாளர்கள் அவரை பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல வாகன வசதியை அதிகாரிகள் ஏற்பாடு செய்யாததால் அதே குப்பை வண்டியில் ஏற்றி அவரது வீட்டிற்கு எடுத்துச் சென்றார்கள்.

இறந்த பாலனுக்கு தங்கமணி என்ற மனைவியும், தீனா, சுஜித் என்ற குழந்தைகளும், மாரியம்மாள் என்ற வயதான தாயாரும் உள்ளனர். இவர்கள் இறந்த பாலனின்  உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்தனர். அவரது மறைவால் இக்குடும்பம் நிலைகுலைந்து போயுள்ளது.

 

 


இதனை அறிந்ததும், ஏஐடியுசி ஈரோடு மாவட்ட உள்ளாட்சித் துறை பணியாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில் ஊரடங்கு காலத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது மரணமடைந்த பாலன் குடும்பத்திற்கு ரூபாய் ஐம்பது லட்சம் இழப்பீடும், அவரது மனைவி தங்கமணிக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்தநிலையில், தமிழ்நாடு ஏஐடியுசி தலைவரும், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சுப்பராயன், பாலன் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்த அவரது ஓட்டை வீட்டை பார்த்து வேதனைப்பட்ட சுப்பராயன் பிறகு நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் மணிவண்ணனை பேரூராட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்து, மறைந்த பாலனின் மனைவி தங்கமணிக்கு பேரூராட்சியில் நிரந்தர வேலை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும், அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறும், மிகவும் பழுதடைந்துள்ள  அவரது வீட்டை உடனடியாக புதுப்பித்து தருமாறும் கேட்டுக் கொண்டார். அதோடு விடாமல் தமிழ்நாடு முதலமைச்சருக்கும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் கடிதம் எழுதுவதாகவும் கூறினார்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எழுத்தாளர் தேவிபாரதியை நேரில் சென்று வாழ்த்திய அமைச்சர்!

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
Writer Devibharathi greeted the minister in person

ஒவ்வொரு வருடமும் இலக்கிய ஆளுமைகளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் சாகித்திய அகாடமி விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இந்த வருட விருது தமிழ் எழுத்தாளரான தேவிபாரதிக்கு அவர் எழுதிய ‘நீர்வழிபடூஉம்’ என்ற நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் டெல்லியில் அவருக்கு மத்திய அரசின் சார்பில் விருது வழங்கி சிறப்பு சேர்க்கப்படுகிறது.

எழுத்தாளர் தேவிபாரதி சாதாரண எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். திருப்பூர் மாவட்டம் பழைய கோட்டை அருகே உள்ள நொய்யல் நதிக்கரையில் இருக்கும் புது வெங்கரையாம்பாளையம் என்ற குக்கிராமத்தில்தான் அவர் வசித்து வருகிறார். சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டவுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல் பல்வேறு தலைவர்கள் தொலைப்பேசி மூலமும் பல எழுத்தாளர்கள், அவரின் நண்பர்கள் எனப் பலரும் நேரில் சென்று தேவிபாரதியை வாழ்த்தி வருகிறார்கள்.

அந்த வரிசையில் தமிழக செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரான மு.பெ. சாமிநாதன், எழுத்தாளர் தேவிபாரதியை அவர் வசித்து வரும் கிராமத்திற்குச் சென்று எழுத்தாளர் தேவிபாரதியை தமிழக அரசின் சார்பாகவும் முதல்வர் சார்பாகவும் வாழ்த்தி கௌரவித்தார். அப்போது அவருடன் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் உடன் இருந்தார். சாகித்திய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் தேவிபாரதியை அமைச்சர் நேரில் சென்று வாழ்த்தியது அந்த கிராம மக்களையும், எழுத்தாளர்களையும், இலக்கிய ஆர்வலர்களையும் உற்சாகமடையச் செய்துள்ளது. 

Next Story

“பெண்கள் உலகை ஆளுகின்ற காலம் வந்துவிட்டது” - முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

CM MK Stalin proudly says The time has come when women rule the world

 

திருப்பூர் மாவட்டம், வஞ்சிபாளையம், அவிநாசி-மங்கலம் சாலையில் கட்டப்பட்டுள்ள தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (29.11.2023) காணொளிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். மேலும் புதிதாகக் கட்டப்படவுள்ள தீரன் சின்னமலை சிபிஎஸ்இ பள்ளிக்கு அடிக்கல் நாட்டினார்.

 

அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “ஒரு காலத்தில் கல்வி என்பது எல்லாருக்கும் எளிதாக கிடைத்து விடவில்லை. எட்டாக்கனியாக இருந்த கல்வி, இன்றைக்கு எல்லாருக்கும் கிடைக்கிறது என்றால், அதற்குப் பின்னால் ஏராளமான போராட்டங்கள் இருக்கிறது. நீதிக்கட்சிக் காலத்திலிருந்து சமூகநீதியை வலியுறுத்தி வருகின்ற சமூக சீர்திருத்தத் தலைவர்களால்தான் இந்த மாற்றம் சாத்தியமானது. பெருந்தலைவர் காமராசர் பள்ளிக் கல்வியை ஊக்கப்படுத்தினார். அதை கல்லூரிக் கல்வியாக கலைஞர் விரிவுபடுத்தினார். திரும்பிய பக்கம் எல்லாம் பள்ளியும், கல்லூரியும் உருவாக்கப்பட்டதால்தான், இன்றைக்கு வீடுகள் தோறும் பட்டதாரிகள் வலம் வருகிறார்கள்.

 

இன்னொரு பக்கம் சமூக அமைப்புகளும், சேவை மனப்பான்மையோடு பள்ளி கல்லூரிகளைத் தொடங்கினார்கள். அதனால்தான் கல்வி நீரோடை தடங்கல் இல்லாமல் நாடு முழுவதும் பாய்கிறது. இந்தக் கல்வி வாய்ப்பை எல்லாம் தமிழ்நாட்டு இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். முக்கியமாகப் பெண் பிள்ளைகள், கல்லூரிக் கல்வி உயர் கல்விகள் என்று நிறைய படிக்க வேண்டும். பெண் கல்வியை ஊக்குவிப்பதற்குத்தான் அரசு பள்ளியில் படித்துவிட்டு, கல்லூரிக்கு வரும் மாணவிகளுக்கு திராவிட மாடல் ஆட்சியில் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் தருகிறோம். பெண்களுக்கு விடியல் பயணம் என்று கட்டணமில்லா பேருந்து வசதி செய்து கொடுத்திருக்கிறோம்.

 

CM MK Stalin proudly says The time has come when women rule the world

 

என்னுடைய கனவெல்லாம், தமிழ்நாட்டு மாணவர்களும் மாணவிகளும் உலகம் எல்லாம் சென்று சாதிக்க வேண்டும். நீங்கள் சாதிப்பதை பார்த்து நான் மகிழ்ச்சி அடையவேண்டும். பெண்களை வீட்டுக்குள் முடக்குகின்ற பழைய காலம் எல்லாம் மலையேறி சென்றுவிட்டது. பெண்கள் உலகை ஆளுகின்ற காலம் வந்துவிட்டது” எனப் பேசினார்.

 

CM MK Stalin proudly says The time has come when women rule the world

 

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் க. பொன்முடி, சு. முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன், சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ்  எனப் பலரும் கலந்து கொண்டனர்.