Skip to main content

பெண் தற்கொலை வழக்கில் விசாரணை அதிகாரி நியமனம்! 

Published on 07/10/2022 | Edited on 07/10/2022

 

WOMEN INCIDENT POLICE INVESTIGATION PUDUKKOTTAI DISTRICT

 

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நீலகண்டன் மனைவி கோகிலா (வயது 36).கடந்த அக்டோபர் 1- ஆம் தேதி அவரது வீட்டில் சேலையில் தூக்கிட்டு சடலமாகக் கிடந்தார். அவரது உடல் அருகில் இருந்த ஒரு நோட்டில் "என் சாவுக்கு காரணம் எம்.எம்.குமார் மற்றும் அவரது மனைவி தான். செய்யாத தப்பிற்கு என் மீது பொய் புகார் கொடுத்துவிட்டனர். அந்த புகார் பற்றி விசாரிக்காமல் எஸ்.ஐ. ஜெயக்குமார் மற்றும் பெண் காவல்துறையினர்  அதிகாலையில் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். காவல்துறையினர் கைது செய்வார்களே என்று என் கணவர் வீட்டிற்கே வரவில்லை. இந்த மன உளைச்சலால் சாகிறேன்" என்று எழுதப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில், பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். இரண்டு நாட்களுக்கு பிறகு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதில் 2 ரத்தக் கட்டுகளும், வயிற்றில் விஷம் இருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த நிலையில், காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்தால் தான் சடலத்தை வாங்கவோம் என்ற உறவினர்கள், புதுக்கோட்டை கோட்டாட்சியரிடம் கீரமங்கலம் காவல்துறையினர் விசாரிக்காமல் விசாரணை அதிகாரி மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்தனர். அதன்படி காவல்துறையினர் 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதும் சடலத்தை பெற்று அடக்கம் செய்தனர்.

 

இந்த நிலையில், கோகிலா வழக்கை விசாரிக்க புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை எஸ்.பி. வந்திதா பாண்டே புதிய விசாரணை அதிகாரியாக அறந்தாங்கி டி.எஸ்.பி. தினேஷ்குமாரை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

புதிய விசாரணை அதிகாரியிடம் கடிதம் எழுதப்பட்ட நோட்டு ஒப்படைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. விசாரணையில் கழுத்தில் ஏற்பட்டிருந்த ரத்தக்கட்டுகள் பற்றியும் தெரிய வரும். மேலும் கோகிலாவின் இறப்பிற்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிந்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்கின்றனர். விரைந்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே உறவினர்களின் கோரிக்கையாக உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவிலுக்குச் சென்ற போது நேர்ந்த சோகம்; பெண்கள், மாணவிகள் 4 பேர் பலி

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
4 women who went to the temple drowned in the water and passed away

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த சரோஜா( 45) அவரது மகள் லலிதா (22). அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காவியா (18) அவரது 17 வயது தங்கை   உட்பட 4 பெண்கள் இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் அருகே உள்ள வேப்பூர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுள்ளனர். வழிபாடு முடிந்த நிலையில் முனீஸ்வரன் கோவிலுக்கு அருகே உள்ள வேப்பூர் ஏரியில் உள்ள தண்ணீரில் நான்கு பெண்களும் இறங்கி உள்ளனர் 

ஏரியில் உள்ள சுழலில் சிக்கி நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கி கூச்சலிட்டுள்ளனர். மேலும் நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கிய நிலையில் அக்கம் பக்கத்தினர் இது குறித்து குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி சரோஜா, லலிதா, காவியா, பிரீத்தா, ஆகிய நான்கு பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரே பகுதியைச் சேர்ந்த அம்மா, மகள் மற்றும் சகோதரிகள் என நான்கு பெண்கள் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

சகோதரிகள் இருவரை 5 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 Police arrested 4 people for misbehaving with two sisters

அருப்புக்கோட்டை - கல்லூரணியைச் சேர்ந்த பெண் ஒருவர், அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், ‘என்னுடைய தங்கை,  அருப்புக்கோட்டை பெர்கின்ஸ்புரத்தில் வசித்து வருகிறார். நாங்கள் இருவரும் குறிஞ்சாங்குளத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில், எனது சம்பளப் பணத்தை வாங்குவதற்காக அருப்புக்கோட்டையில் உள்ள என்னுடைய தங்கை வீட்டிற்குச் சென்றபோது, எங்களுக்கு அறிமுகமான ராஜ்குமார் என்பவர் எங்களிடம், ‘உங்க மாமாவுக்கு ஆக்ஸிடன்ட் ஆயிருச்சு.’ என்று கூறி, எங்களை அழைத்துக் கொண்டு வாழ்வாங்கி காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்றார்.  அங்கு  மறைந்திருந்த  நான்கு பேரும், ராஜ்குமாரை தாக்குவது போல் தாக்கி, அவர் கண் முன்னே எங்கள் இருவரையும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர்.’  எனக் குறிப்பிட்டிருந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். டிஎஸ்பி ஜெகந்நாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட காவல்துறையினர், இளம் பெண்களை அழைத்துச் சென்று விசாரணை  நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, சேதுராஜபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 24) என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, ராஜ்குமாரும், இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மற்ற நான்கு பேரும் கூட்டாளிகள் என்பதும், அதிலொருவன் 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து ராஜ்குமார் அளித்த தகவலின் அடிப்படையில், அந்த 17 வயது சிறுவன், ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் (வயது 26), சூரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலாஜி (வயது 26) மற்றும் இளம் பெண்களை அழைத்துச் சென்ற ராஜ்குமார்(24) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். தலைமறைவான பந்தல்குடியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரைத் தேடி வருகின்றனர்.