திருச்சி மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையின் மேல்தளத்தில் ஆபரேஷன் தியேட்டர் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. இந்த ஆபரேஷன் தியேட்டரில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனைத்தொடர்ந்து ஊழியர்கள் அங்கு சென்று திறந்து பார்த்த பொழுது 50 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் இருந்ததை கண்டு திடுக்கிட்டனர்.
இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் அந்த பெண் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பரபரப்பான அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆபரேஷன் தியேட்டரில் 2 நாட்களாக பெண் பிணம் கிடந்தது தெரியாமல் டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் வந்து சென்றது எப்படி என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த சம்பவம் மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.