Skip to main content

தோஷம் கழிப்பதாக தோழியை மோசம் செய்த பெண்!

Published on 24/09/2021 | Edited on 24/09/2021

 

Woman who cheated her friend arrested in nagarkovil

 

மூடநம்பிக்கையை ஒழிக்க என்னதான் முயற்சி மேற்கொண்டாலும் கடவுள்களின் பெயரைச் சொல்லி இன்னும் மக்களை ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில்தான் தோழியாகப் பழகி, பல பெண்களிடம் தோஷங்கள் கழிப்பதாகக் கூறி ஏமாற்றி, நகை மற்றும் பணத்தைப் பறித்த நாகர்கோவிலைச் சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

 

நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்த கஸ்தூரிராஜன் மனைவி சுஜிதா (34). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் நெருங்கிய தோழிகளாகப் பழகிவந்தனர். இதில் சுஜிதா, தினமும் பல்வேறு கோவில்களுக்குச் சென்றுவருவதுடன், குறி சொல்பவராகவும் தோஷங்கள் கழிக்கும் மந்திரவாதியாகவும் தன்னைக் காட்டிவந்தார். இந்த நிலையில், தோழியின் தாலிக்குத் தோஷம் இருப்பதாகவும் அதேபோல் அவரது இரண்டு மகள்களின் தாலி பாக்கியத்திற்குத் தடை இருப்பதாகவும் கூறியுள்ளார்.

 

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தோழி, தன்னுடைய கணவருக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்றும் மேலும் தனது இரண்டு மகள்களுக்குத் திருமணமும் நடக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதை தன்னுடைய திட்டத்துக்கு சாதகமாக்கிக் கொண்ட சுஜிதா, “அதற்கு வீட்டில் இருக்கும் நகைகளை வைத்து தோஷம் கழிக்க வேண்டும். அந்தப் பரிகார பூஜையை நானே செய்கிறேன்” எனக் கூறி பூஜைக்கான ஏற்பாடுகளை செய்வதாக கூறி நகைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கியுள்ளார். அப்படி அவர் வாங்கிய நகை 22 பவுன்.

 

அதன் பிறகு தாலிச் செயினையும் கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த தோழி, கணவனிடம் விசயத்தைக் கூறியுள்ளார். கணவர், சுஜிதாவிடம் கேட்டபோது அவரின் மழுப்பல் பேச்சில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து மனைவி மூலம் வடசேரி போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீஸ் விசாரணையில் அவள் போலியான மந்திரவாதி என தெரியவந்தது.

 

இதையடுத்து சுஜிதாவை கைது செய்து விசாரித்த போலீசார், சுஜிதா இந்தப் பெண்ணை மட்டுமல்ல, அவர் செல்லும் கோவிலுக்கு வரும் பெண்களிடமும் அதேபோல் திருமண நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது அங்கு வரும் பெண்களிடமும் நைசாக பேசி, அவர்களைத் தோழியாக்கி, இப்படி தோஷம் இருப்பதாகக் கூறி அவர்களிடமிருந்து நகைகள் மற்றும் பணத்தைப் பறித்துள்ளார். இவரிடம் பல பெண்கள் ஏமாந்திருப்பதாக போலீசார் கூறினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது. 

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.