Skip to main content

தொடர் மழை: வீடு இடிந்ததில் பெண் பலி! 

Published on 15/11/2021 | Edited on 15/11/2021

 

 Woman passes away in house collapse

 

பழமையான வீடு இடிந்து விழுந்ததில் இடர்ப்பாடுகளில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயத்துடன் இரண்டு பெண்கள் நாகை அரசு தலைமை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பது நாகையில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

 

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கிவருகிறது. டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்து பயிர்சேதம், உயிர்சேதங்களை உண்டாக்கிவருகிறது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், பொதுமக்களையும் பார்வையிட்டு ஆறுதல் கூறியதோடு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று உத்தரவாதம் வழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார். இதற்கிடையில், அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்து மழைச்சேதங்கள் குறித்த அறிக்கையைக் கேட்டிருக்கிறார் முதல்வர்.

 

இந்தநிலையில், நாகூர் செய்யது பள்ளி தெருவில் உசைன் என்பவருக்கு சொந்தமான பழமையான ஓட்டுவீடு இடிந்து உயிர்சேதத்தை உண்டாக்கியிருப்பது பலரையும் வேதனை அடையச் செய்துள்ளது. 

 

நாகையை அடுத்துள்ள நாகூரைச் சேர்ந்தவர் உசைன். இவருக்கு சொந்தமான ஓட்டுவீட்டில் அவருடைய மனைவி ஜெகபர் நாச்சியார் (65) வசித்துவருகிறார். அவரைப் பார்ப்பதற்காக சென்னையிலிருந்து சொந்த வீட்டிற்கு வந்த மகள் ரெஜினா பானு (43) மற்றும் உறவினரான ஜெகபர் நாச்சியார் (70) ஆகியோர் அந்த வீட்டில் இருந்தனர். கனமழையினால் வீட்டின் சுவர்கள் வலுவிழந்து இருந்துள்ளன. திடீரென 13ஆம் தேதி  இரவு பயங்கர சத்தத்துடன் வீடு இடிந்து விழுந்தது. அந்த விபத்தில் மூவரும் இடர்ப்பாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

 

பின்னர் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு அவர்களை மீட்பதற்கு நீண்ட நேரம் போராடினர். இதற்கிடையில் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த நாகை தீயணைப்பு வீரர்கள், பொதுமக்களின் உதவியோடு மூவரையும் அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்டு மூவரையும் ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

 

இதில் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு வந்த ரெஜினா பானு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த இருவரும் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

வீடு இடிந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

வரலாறு காணாத கனமழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Unprecedented heavy rains in california

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. 

அதன்படி, கலிபோர்னியா பகுதியில் நேற்று (06-02-24) வரலாறு காணாத கனமழைக் கொட்டித் தீர்த்தது. இதில், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட சில இடங்களில் 25 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்த வெள்ளத்தின் போது பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் பலரும் அதில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மணிக்கு 78 மைல் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் கிட்டத்தட்ட 8,75,000 வீடுகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

வரலாறு காணாத இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த மழை வெள்ளத்தால் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த வெள்ளம் குறித்து தேசிய வானிலை மையம் கூறியுள்ளதாவது, ‘5 முதல் 10 அங்குலங்கள் (12.7செ.மீ முதல் 25.4 செ.மீ) வரை பெய்துள்ளது. மேலும், இந்த மழையின் அளவு அதிகரிக்கக்கூடும்’ என்றும் தெரிவிக்கப்படுகின்றது.