தோட்டத்திற்கு பூ பறிக்கச் சென்றபோது அக்கா கண்முன்னே தங்கை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள சாணாம்பட்டியைச் சேர்ந்தவர் பம்பையன். இவரது மகள்களான சின்னப்பொண்ணு, ஈஸ்வரி ஆகிய இருவரும் தங்களுக்குச் சொந்தமான தோட்டத்தில் மல்லிகை பூ விவசாயம் செய்து வருகின்றனர். அதற்காக இருவரும் தினந்தோறும் தோட்டத்திற்குச் சென்று மல்லிகை பூ பறித்து மார்கெட்டிற்க்கு அனுப்பி வைப்பதை வழக்கமாக வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த வகையில் நேற்றும் பூ பறிக்க இருவரும் தோட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, திண்டுக்கல்லில் இருந்து மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று தங்கை ஈஸ்வரி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாடிப்பட்டி போலீசார், ஈஸ்வரியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஈஸ்வரியை மோதிவிட்டுச் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தையும், அதன் ஓட்டுநரையும் தேடி வருகின்றனர்.