Skip to main content

சென்னையில் தீவிர ஊரடங்கு அமலாகுமா? மாநகராட்சி நிர்வாகம் ஆலோசனை! 

Published on 16/09/2021 | Edited on 16/09/2021

 

Will there be a severe curfew in Chennai? Corporation Administration Advice!

 

சென்னையில் கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், பல்வேறு தளர்வுகளை அமல்படுத்தியது தமிழ்நாடு அரசு. பொது மக்களும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். திரையரங்குகள், கடற்கரைகள், மீன் மார்க்கெட்டுகள் ஆகியவை கட்டுப்பாடின்றி திறக்கப்பட்டதால் மக்களின் கூட்டம் பெருக்கெடுத்தது. ஆனால், கரோனா கட்டுப்பாடு வழிமுறைகளை இந்த இடங்களில் மக்கள் கடைப்பிடிப்பதில்லை. குறைந்தபட்சம் முகக் கவசம் கூட அணிவதில்லை. இதனால் கரோனாவின் மூன்றாம் அலை பரவுமோ என்ற அச்சம் பலருக்கும் இருக்கிறது.

 

அதேபோல, அரசுக்கு சொந்தமான பள்ளி, கல்லூரி மைதானங்களை கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் தனியார் நிறுவனங்கள் முறைகேடாக பயன்படுத்திவருகிறார்கள். குறிப்பாக, 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் தனியார் பயிற்சி மையங்கள், சம்மந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரிடமிருந்து ஆயிரக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதனால் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கட்டாயத்துக்கு ஆளான தனியர் பயிற்சி மையங்கள், அந்த மாணவர்களை மைதானங்களுக்கு அழைத்துவருகிறார்கள்.

 

பொதுவாக, 15 வயதுக்குட்பட்ட மாணவர்களை கரோனாவின் மூன்றாம் அலை தாக்கும் என்பதால்தான் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசு இதுவரை பள்ளிகளைத் திறக்கவில்லை. அதாவது, 15 வயதுக்குட்பட்டவர்கள் வெளியே வரக் கூடாது; வீட்டில் இருக்க வேண்டும் என்பதுதான் இதன் பொருள். ஆனால், கிரிக்கெட் பயிற்சி என்கிற பேரில் மைதானங்களுக்கு 15 வயதுக்குட்பட்டவர்களை தனியார் பயிற்சி மையங்கள் வெளியே அழைத்து வருவதை அரசும், சென்னை மாநகராட்சியும் கண்டுகொள்ளவில்லை. இதனால் மைதானங்களில் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. 

 

குறிப்பாக, தரமணியிலுள்ள மத்திய பாலிடெக்னிக் வளாக மைதானத்தை தனியார் கிரிக்கெட் பயிற்சி மையம் பயன்படுத்திவருகிறது. கடந்த 1ஆம் தேதி முதல் இங்கு கிரிக்கெட் பயிற்சியில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களை ஈடுபடுத்திவருகிறார்கள். அங்கு கரோனா கட்டுப்பாடுகள் எதுவும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. தங்களின் வருவாய்க்காக பயிற்சி என்ற பேரில் சிறுவர்களைப் பயன்படுத்துகின்றன தனியார் பயிற்சி நிறுவனங்கள். மேலும், அரசுக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தை தனியார் பயன்படுத்துவது எப்படி? என்றும் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

 

மூன்றாம் அலை பரவலாம் என்கிற எச்சரிக்கை இருக்கும் நிலையில், தியேட்டர்கள், கடற்கரைகள், மீன் மார்க்கெட்டுகள், கிரிக்கெட் பயிற்சிகள் என தொடர்வது கரோனாவைப் பரப்பாதா? என்றும் கரோனா களப்பணியில் இருக்கும் செவிலியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

 

இதுகுறித்து அரசின் கவனத்துக்கும் சென்னை மாநகராட்சிக்கும் புகார்கள் பறந்துள்ளன. இது தொடர்பாக இரு தரப்பும் ஆலோசிக்கின்றன. இதனால் சில தீவிர கட்டுப்பாடுகளை சென்னைக்குள் அமல்படுத்தலாமா? என்று மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.