Skip to main content

தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் பள்ளிகள் திறப்பது சரியாக இருக்குமா..? - ராஜேஸ்வரி பிரியா கேள்வி!

Published on 12/10/2021 | Edited on 12/10/2021

 

gh

 

கரோனா காரணமாகத் தமிழகத்தில் பள்ளிகள் ஒரு வருடத்திற்கு மேலாக மூடப்பட்டு இருந்தது. இதனால் மாணவர்கள் நீண்ட நாட்களாகப் பள்ளிக்குச் செல்லமுடியாமல், ஆன்லைன் வகுப்புகளில் பாடங்களைப் படித்து வந்தனர். இதற்கிடையே கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால் 9ம் முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்குச் செப்டம்பர் மாதம் முதல் தேதி முதல் வகுப்புக்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் முதல் தேதியிலிருந்து மற்ற வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளி துவங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில் இதுதொடர்பாக அனைத்து மக்கள் அரசியல் கட்சி, நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், "கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற நவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் (1 ம்‌ வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை) திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார். இவ்வளவு நாட்கள் கழித்து பள்ளிகளைத் தீபாவளி சமயத்தில் திறப்பது என்பது மிகுந்த பாதிப்பை உருவாக்குவதற்கான வாய்ப்பை உருவாக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. தற்போது பொதுவாகவே எல்லா இடங்களிலும் எந்தவிதமான கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளும் சரியாகப் பின்பற்றப்படுவதில்லை . இன்னும் நோய்த்தொற்று முழுமையாகக் குறைந்தபாடில்லை, தடுப்பூசியும் முழுமையாகச் செலுத்தி முடியவில்லை. 

 

மக்கள் கூட்டம் கூட்டமாகப் பொருட்கள் வாங்குவதற்குச் செல்வார்கள். இப்படி இருக்கின்ற சூழலில் தீபாவளி வாரமாகிய நவம்பர் 1ம் தேதி சிறு குழந்தைகள் ஒன்றாம் வகுப்பு  முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு பள்ளிக்குச் செல்வது என்பது அனைத்து பெற்றோருக்கும் மனதில் ஒருவிதமான பயத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. நீங்கள் கூறியவாறு பள்ளிகள் திறக்கப்படாவிட்டால் குழந்தைகள் கல்வி அறிவில் பின் தங்குவார்கள் என்பது உண்மைதான் அதற்காக இவ்வளவு நாள் காத்திருந்தது வீணாகும் வகையில் பண்டிகை காலகட்டத்தில் திறப்பது சரியாக இருக்குமா என்பதை அரசு கவனத்தில் கொண்டு சிந்திக்க வேண்டும்.

 

தீபாவளி பண்டிகை முடிந்து 15 நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பது என்பது ஓரளவிற்குச் சரியானதாக இருக்கும் என்று எண்ணுகிறோம். அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் சார்பாக இந்த கோரிக்கையினை  முதல்வர் அவர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கும் வைக்கின்றோம். கண்டிப்பாக அரசு இந்த கோரிக்கையினை ஏற்று முடிவினை  மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Holiday notification for only 7 schools in Mayiladuthurai

மயிலாடுதுறை நகரில் நேற்று (02-04-24) இரவு மிகப் பெரிய சிறுத்தை ஒன்று தென்பட்டதையடுத்து சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை தென்பட்ட கூறைநாடு பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்று (02-04-24) இரவு  11 மணிக்கு  சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை நடமாட்டம் உள்ள கால் தடத்தை வைத்து சிறுத்தை சென்றதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, நள்ளிரவு முதல் வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் கையில் வலைகளுடன் தேடி வருகின்றனர். அதில், சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர். இதற்கிடையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள கூறைநாடு பகுதியில் உள்ள பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் என்கிற தனியார் பள்ளிக்கு அந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விடுமுறை இன்று (3.4.2024)  அளித்திருந்தார்.

இந்த நிலையில் சிறுத்தை அச்சுறுத்தல் காரணமாக மயிலாடுதுறை நகரில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை(4.4.2024) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு காவல்துறை, தீயணைப்புத்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.  

Next Story

பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Ooty famous private schools email incident

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இரு பிரபல சர்வதேசத் தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் இன்று (19.03.2024) மதியம் 02.30 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் 3 வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதே சமயம் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து மாணவர்களைப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். போலீசார் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது வதந்தி என்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் உள்ள அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி (08.02.2024) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.