Skip to main content

பலமுறை கொலை முயற்சி; கணவன் கண்முன்னே கடத்தப்பட்ட காதல் மனைவி!

Published on 28/01/2023 | Edited on 28/01/2023

 

wife kidnapped in front of her husband

 

தென்காசி மாவட்டம் இலஞ்சி அருகே உள்ள கொட்டாகுளம் என்னும் ஊரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் வினீத் தன் பள்ளி பருவத்தில் இருந்தே அதே பகுதியை சேர்ந்த கிருத்திகா என்பவரை காதலித்து வந்துள்ளார். பள்ளி பருவத்தில் இருந்தே காதலிக்க தொடங்கினாலும் திருமணம் செய்து கொள்வதற்கு சரியான நேரம் வரும்வரை காத்திருந்தார் இளைஞர்  வினீத். தற்போது  தனது எஞ்சினியரிங் படிப்பை முடித்த வினீத் சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

 

இந்த நிலையில் வினீத் வீட்டில் அவருக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க, அப்போது வினீத் தான் கிருத்திகாவை காதலிக்கும் விஷயத்தை சொல்லி தன் வீட்டில் அவரின் காதலுக்கு ஒப்புதலும் வாங்கியுள்ளார். ஆனால் இவர்களின் காதலை வினீத்தின் காதலியான கிருத்திகாவின் வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் வினீத் கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி தன் காதலி கிருத்திகாவை பதிவு திருமணம் செய்து கொண்டார். மேலும் பெண் வீட்டார் தரப்பில் இருந்து தங்களுக்கு ஏதாவது ஆபத்த்து நேரலாம் என்று நினைத்த வினீத் - கிருத்திகா தம்பதி தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று குற்றாலம் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டுள்ளார்கள்.

 

இதற்கிடையே கடந்த புதன்கிழமை தென்காசி குத்துக்கல்வலசை எனும் இடத்தில் தங்கள் உறவினர் வீட்டில் இருந்த வினீத் கிருத்திகா தம்பதியை கிருத்திகாவின் பெற்றோர் சில அடியாட்கள் கொண்ட கும்பலுடன் வந்து கடுமையாக தாக்கியுள்ளனர். வினீத்தின் கழுத்தை நெரித்து கொலை முயற்சியில் ஈடுபட்ட அந்த கும்பல் வினீத்தின் கண் முன்னே அவரது மனைவி கிருத்திகாவை கடத்தி சென்றுள்ளது. அப்படி கிருத்திகாவை வலுக்கட்டாயமாக கடத்தி செல்லும் அந்த வீடியோ ஊடகங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கிருத்திகாவின் தந்தையான நவீன் பட்டேல் மற்றும் சில அடியாட்கள் கும்பல் கிருத்திகாவை கடத்தியதோடு அங்கிருந்த வாகனங்கள் சிலவற்றையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட வினீத், தனது மனைவி கிருத்திகாவை மீட்டு தரக்கோரி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். மேலும் கிருத்திகா தன்னுடன் மட்டுமே இருக்க விரும்புவதாக அவர் எழுதிய கடிதத்தையும் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார். 

 

கிருத்திகாவின் பெற்றோர் இதற்கு முன்பே இதுபோல் கிருத்திகாவின் மீது பலமுறை கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பதால் அவரை பாதுகாப்பாக மீட்டு தர வேண்டும் என்பதே வினீத்தின் கோரிக்கையாக இருக்கிறது. பட்ட பகலில் நடந்துள்ள இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி  இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்