Skip to main content

சில நாட்களிலேயே முடிவுக்கு வந்த காதல் உறவு; காதலன் வீட்டு முன்பு பெண் ஆசிரியர் போராட்டம்

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

wife has filed police complaint against her husband salem

 

திருமண ஆசை காட்டி திருமணத்திற்கு முன்பே பாலியல் அத்துமீறல் செய்த காதலன், தாலி கட்டிய பின் சில நாட்களிலேயே ஓட்டம் பிடித்ததால் ஏமாந்து போன பெண் ஆசிரியர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காதல் கணவன், அவருடைய பெற்றோர் உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள உடையார்பாளையம் நேரு நகரைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகள் சுகன்யா (28). தனியார் பள்ளி ஆசிரியர். இவர், நவ. 20 ஆம் தேதி, சேலம் பச்சைப்பட்டி பேச்சியம்மன் கோயில் தெருவில் உள்ள கோகுல் (27) என்பவர் வீட்டிற்குச் சென்று, திடீரென்று தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.  

 

அப்போது அவர், ''கோகுல் என்னை காதலித்து, திருமண ஆசை காட்டி, பாலியல் உறவு கொண்டார். அதனால் நான் கர்ப்பம் அடைந்தேன். பின்னர் அவர் சொன்னதன் பேரில்  வயிற்றில் வளர்ந்த கருவைக் கலைத்துவிட்டேன். அதையடுத்து என்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டார்'' என்றார்.  

 

கோகுலின் பெற்றோர் வீட்டுக்கு வெளியே வந்து சுகன்யாவிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். காவல்துறை அறிவுறுத்தலின் பேரில் சேலம் நகர மகளிர் காவல்நிலையத்தில் கோகுல் மீது புகார் அளித்தார்.  

 

அவர் அளித்த புகாரில் “கோகுலும் நானும் காதலித்து வந்தோம். கடந்த 2019 ஆம் ஆண்டு என்னை சென்னைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். அதனால் கர்ப்பம் அடைந்தேன். பின்னர் அவர் என் வயிற்றில் வளர்ந்த கருவை கலைத்துவிட்டார். இதையடுத்து சேலம் திருவாக்கவுண்டனூரில் உள்ள கோயிலில் வைத்து தாலி கட்டினார். சில நாள்கள் மட்டுமே என்னுடன் குடும்பம் நடத்தினார். பின்னர் தாலியைக் கழற்றிவிட்டு என்னை சாதி பெயரைச் சொல்லி திட்டியதோடு, இனிமேல் ஒன்றாக வாழ முடியாது என்று சொல்லிவிட்டு பிரிந்து சென்று விட்டார்.  கோகுலின் பெற்றோரும், அவருடைய அண்ணனும் என்னை ஆபாசமாக பேசுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.  

 

இதுகுறித்து காவல் ஆய்வாளர் பழனியம்மாள் விசாரணை நடத்தி, காதலன் கோகுல், அவருடைய தாயார் ரேணுகாதேவி, தந்தை ரவி, அண்ணன் சந்தோஷ் ஆகிய நான்கு பேர் மீது சாதி வன்கொடுமை உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். இது தொடர்பாக சேலம் நகர காவல்துறை உதவி ஆணையர் வெங்கடேசன் விசாரணை நடத்தி வருகிறார். கோகுல் மீது ஏற்கனவே சுகன்யா ஆத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், கோகுல் முன்பிணை பெற்றுக்கொண்டு தலைமறைவாக இருந்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து கோகுலின் பெற்றோரைக் கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தச் சம்பவம் சேலம் பச்சைப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.