Skip to main content

சப் இன்ஸ்பெக்டர் மீது அவரது மனைவி பரபரப்பு புகார்..! 

Published on 18/06/2021 | Edited on 18/06/2021

 

  wife complains about sub-inspector in viluppuram


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அவலூர்பேட்டை காவல் நிலையத்தில் தற்போது சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்துவருகிறார் இளங்கோவன் (35). இவரது மனைவி இந்துமதி (30). இவர், நேற்று (17.06.2021) மதியம் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் உள்ளே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் நேரடியாக நடத்திய விசாரணையில், இந்துமதி கூறியதாவது; “2019ஆம் ஆண்டு எனக்கும் தற்போது அவலுர்பேட்டை காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் இளங்கோவனுக்கும் திருமணம் நடந்தது. 

 

திருமணம் முடிந்த 5 மாதத்தில் எனது கணவர் பல்வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக எங்களுக்குள் அடிக்கடி தகராறு, பிரச்சனை ஏற்பட்டுவந்தது. இதுகுறித்து எனது பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்கள், ‘எல்லாம் சரியாகிவிடும்’ என்று கூறினார்கள். இதன் பிறகு எனது கணவர் இளங்கோவன், எனது பெற்றோரிடமிருந்து 100 சவரன் நகைகளை வரதட்சணையாக வாங்கி வருமாறு தகராறு செய்தார். எப்படி நமது மகளை வைத்து நல்ல முறையில் வாழ்வார் என்ற காரணத்தினால், எனது பெற்றோருக்கு சொந்தமான நிலத்தை எனது கணவர்  பெயருக்கு எனது பெற்றோர் எழுதிக் கொடுத்தனர். அதன் மதிப்பு 2 கோடி ரூபாய். ஆனால், அதன் பிறகும் என்னுடன் வாழாமல் அவலூர்பேட்டையிலேயே தங்கியுள்ளார்.

 

அவர் ஆரோவில் காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது சம்பாதித்த பணத்தில் நிலம், வீடு வாங்கியுள்ளார். அவை அனைத்தையும் அவரது தங்கை பெயரில் எழுதிவைத்துள்ளார். அவரது தங்கை கணவர், காஞ்சிபுரத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்கிறார். அவரும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துவருகிறார். எங்கள் உறவினர்கள் பலமுறை அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி என்னோடு சேர்ந்து என் கணவர் வாழ்வதற்கு முயற்சி செய்தனர். அவர் ஒத்துவரவில்லை. இதற்கு மேலும் பொறுப்பதில் பயனில்லை என்று முடிவு செய்தேன். ஏற்கனவே  இங்கு வந்து மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இரண்டு முறை புகார் அளித்தேன். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. 

 

இதன்பிறகு என் கணவர் என்னை மேலும் சித்திரவதை செய்ய ஆரம்பித்தார். குடும்ப வாழ்க்கை என்பதால் அனைத்தையும் பொறுத்துக்கொண்டிருந்தேன். இனி எனது கணவருடன் சுமுகமான முறையில் சேர்ந்து வாழவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், அவர் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மனைவி இந்துமதி கூறினார். 

 

அவர் இளங்கோவனுடன் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் ஆகியவற்றை இணைத்து மாவட்டக் காவல்துறை அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டுச் சென்றார். புகாரை வாங்கிய காவல்துறை அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொள்வதாக உறுதியளித்து அவரது மனைவியை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ஒருவர் மீது, அவரது மனைவியே பல்வேறு பரபரப்பான குற்றச்சாட்டுகளைக் கூறி புகார் அளித்துச் சென்ற சம்பவம் விழுப்புரம் மாவட்டக் காவல்துறையில் மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.