Skip to main content

நூற்பாலை ஊழியர் அடித்துக் கொலை; மனைவி, மைத்துனர் கைது

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

Wife  brother-in-law arrested in case beating spinning mill worker

 

சங்ககிரி அருகே, தனியார் நூற்பாலை ஊழியரை அடித்துக் கொன்ற வழக்கில் அவருடைய மனைவி, மைத்துனரை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள தாசநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் தனபால். குமாரபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சரிதா (38). இவர்களுக்கு 20 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. 20 வயதில் ஒரு மகளும், 17 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.  

 

கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு கணவன், மனைவிக்குள் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, சரிதா கணவரைப் பிரிந்து சென்று விட்டார். அவர், சங்ககிரி ஆர்.எஸ். பகுதியில் தனியாக துணிக்கடை நடத்தி வருகிறார். இதற்கிடையே தனபால், உள்ளூரைச் சேர்ந்த சில பெரியவர்கள் மூலமாக தன் மனைவியை சமாதானப்படுத்தி தன்னுடன் சேர்த்து வைக்கும்படி கூறி வந்துள்ளார். தனபாலுக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தின் ஆர்.சி. புத்தகம், கல்விச்சான்றிதழ்கள், ஏ.டி.எம். அட்டை ஆகியவற்றை சரிதாவும், அவருடைய அண்ணன் சரவணனும் எடுத்து வைத்துக்கொண்டு தர மறுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்குள் மோதல் இருந்து வந்தது. 

 

Wife  brother-in-law arrested in case beating spinning mill worker

 

இந்நிலையில், நவ. 21 ஆம் தேதி இரவு தனபால், தனது மைத்துனர் சரவணன் வீட்டுக்குச் சென்று சரிதாவை சமாதானப்படுத்தி தன்னுடன் சேர்த்து வைக்கும்படியும், தன்னுடைய வாகனத்தின் ஆர்.சி. புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்து விடும்படியும் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த சரவணன், சரிதா ஆகியோர் தனபாலை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். சரவணன் கீழே கிடந்த கல்லை எடுத்து தாக்கியுள்ளார். அக்கம்பக்கத்தினர் சண்டையை விலக்கி விட்டுள்ளனர்.  

 

இந்த தாக்குதலில் தனபால் மயக்கம் அடைந்து கீழே சரிந்து விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சங்ககிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பரிசோதனையில், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரிய வந்தது.  

 

இதையடுத்து தனபாலின் தந்தை சின்னப்பன் (70), தனது மகனை கல்லால் அடித்துக் கொலை செய்துவிட்டதாக சரவணன், சரிதா மீது சங்ககிரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  அதன்பேரில் காவல் ஆய்வாளர் தேவி, எஸ்.ஐ. சுதாகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, தனபாலின் மனைவி சரிதா, மைத்துனர் சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைதான இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் சரிதாவை, சேலம் பெண்கள் கிளைச்சிறையிலும், சரவணனை சேலம் மத்திய சிறையிலும் அடைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.