Skip to main content

“7 மாதம் பொறுத்தவங்களால 3 நாள் பொறுக்க முடியாதா?” - பதவியேற்பு குறித்து எம்.எல்.ஏ கேள்வி

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

Why swearing-in ceremony Madras High Court Judge taking place before  arrival CM stalin

 

“உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவை வெளிநாட்டில் இருந்து முதலமைச்சர் வந்த பிறகு நடத்தி இருக்கலாம்” என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ தெரிவித்திருக்கிறார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை 28.05.2023 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய தலைமை நீதிபதியாக நீதி அரசர் சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா பதவி ஏற்பு நடக்கின்றது. இன்னும் மூன்று நாட்களில் தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாட்டுப் பயணத்தை முடித்து சென்னை திரும்புகிறார். மூன்று நாட்கள் கழித்து பதவியேற்பு விழாவை ஏற்பாடு செய்து முதலமைச்சர் கலந்துகொள்ள வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கலாம். திடீரென்று முதலமைச்சர் சென்னையில் இல்லாதபோது தேதி அறிவிக்கப்பட்டு பதவியேற்பு விழா நடத்தப்படுவது தவிர்க்கப்பட்டு இருக்கலாம்.

 

கடந்த ஏழு மாதங்களாக நீதி அரசர் திரு ராஜா அவர்கள் பொறுப்பு நீதிபதியாக பணியாற்றினார். இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் பதவி ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து நீதி அரசர் வைத்தியநாதன் அவர்கள் பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். 7 மாதங்கள் பொறுப்பு நீதிபதியின் கீழ் இயங்கிய சென்னை உயர்நீதிமன்றம் இன்னும் மூன்று நாட்கள் அதேபோல இயங்கி இருந்தால் தமிழ்நாடு முதலமைச்சர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டிருப்பார். 

 

தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர், ஆளுநர், தலைமை நீதிபதி ஆகிய மூன்று பதவிகளும் ஒரு மாநிலத்தின் முக்கியப் பதவிகள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படி இருக்கும் போது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். நீதிமன்றங்களுடைய அனைத்து மேம்பாட்டு பணிகளுக்கும் பராமரிப்புகளுக்கும் தேவையான நிதியை தமிழ்நாடு அரசுதான் ஒதுக்குகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவசர பதவி ஏற்பு நிகழ்ச்சி உள்நோக்கத்தோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொண்டு திட்டமிட்டு இந்த ஏற்பாடுகளை செய்திருந்தால் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிக்கும் இடையிலான பரஸ்பர உறவு சுமூகமாக இருப்பதற்கு வழி வகுத்திருக்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது.