Skip to main content

இளைஞர் மீது மோதிய வாகனம் எது?-மேல்சட்டை இன்றி உறவினர்கள் சாலை மறியல்

Published on 29/01/2023 | Edited on 29/01/2023

 

Which vehicle hit the youth? Relatives barricaded the road without shirts

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வடகாடு சேர்வைகாரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் ரமேஷ். கூலித் தொழிலாளியான இவர் கடந்த 22 ந் தேதி அதிகாலை வீட்டின் அருகே சாலை ஓரம் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வடகாடு போலீசார் உடலைக் கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின் ரமேஷின் உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதோடு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி சடலத்தை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

போலிசார் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் போராட்டத்தைக் கைவிட்டு உறவினர்கள் சடலத்தை அடக்கம் செய்தனர். தொடர்ந்து வடகாடு போலீசார் அதிகாலை நேரத்தில் அந்த வழியாக சென்ற வாகனங்களை கண்டறியும் பொருட்டு அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். அதில் ஒரு கார் சந்தேகத்திற்கிடமாக சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து ஆய்வும் விசாரணையும் நடந்து வருகிறது. விபத்து நடந்து 8 நாட்கள் ஆகியும் தற்போது வரை விபத்து ஏற்படுத்திய வாகனம் கண்டுபிடிக்கப்படவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை.

 

இன்று ஞாயிற்றுக்கிழமை பல கிராமங்களில் இருந்தும் 8 ம் நாள் சடங்கில் கலந்துகொள்ள வந்த ரமேஷின் உறவினர்கள் வழக்கமான கிராம வழக்கப்படி துக்க நிகழ்வில் மேல் சட்டை அணியாமல் இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு கலந்து கொள்வது வழக்கம். அதேபோல வந்த உறவினர்கள் விபத்து ஏற்படுத்திய குற்றவாளியை கண்டுபிடிக்க கோரி அப்படியே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களும் நூற்றுக்கணக்கானோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலால் புதுக்கோட்டை - பட்டுக்கோட்டை பிரதான சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால் புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் உத்தரவில் ஆலங்குடி வட்டாட்சியர் செந்தில்நாயகி போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

விரைவில் விபத்து ஏற்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்படும் ஓட்டுநர் கைது செய்யப்படுவார் என்று உறுதி கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. சுமார் 4 மணி நேரம் நடந்த சாலை மறியல் கைவிடப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக எட்டாம் நாள் சடங்குகள் செய்யப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்