Skip to main content

“சட்டப்பேரவையில் நடந்தது என்ன?” - ஆளுநர் மாளிகை விளக்கம்

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
What happened in the legislature Description of Governor's House

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சட்டப்பேரவைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (12.02.2023) சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். பேரவைக்கு வந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை, சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனையடுத்து காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டத்தொடர் தொடங்கியது.

அப்போது ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையில், “அனைவருக்கும் வணக்கம், தமிழக மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். சட்டப்பேரவையின் நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன. இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கும் செயலாகிவிடும் என்பதால், இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்து உரையாற்றத் தொடங்கிய 4 நிமிடங்களில் உரையை முடித்து தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

அதன் பின்னர் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்தார். அப்போது, “மழை வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து 50 கோடியை ஆளுநர் வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமென்று நாங்கள் கேட்கலாம். சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சற்றே குறைந்தவர்கள் அல்ல... ஜன கன மன இனிமேல்தான் பாடுவோம்” என சபாநாயகர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

இந்நிலையில் சட்டப்பேரவையில் என்ன நடந்தது என ஆளுநர் ஆர்.என். ரவி சார்பில் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில், “ஆளுநரின் உரையின் வரைவு அறிக்கை கடந்த 9 ஆம் தேதி (9.2.2024) தமிழக அரசிடமிருந்து ஆளுநர் மாளிக்கைக்கு அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையில் சிலவற்றை திருத்தம் கோரி தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி தேசிய கீதத்திற்கு உரிய மரியாதையைக் அளிக்க, ஆளுநர் ஆர்.என். ரவி உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும். இது தொடர்பாக, கடந்த காலங்களில் முதலமைச்சர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார். ஆளுநரின் உரை அரசாங்கத்தின் சாதனைகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பிரதிபலிக்க வேண்டும். அதைத் தவிர தவறான அறிக்கைகளை வெளியிடுவதற்கும், அப்பட்டமான அரசியல் கருத்துகளை வெளியிடுவதற்கும் ஒரு மன்றமாக சட்டப்பேரவை இருக்கக்கூடாது என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்திருந்தார். ஆனாலும் ஆளுநரின் ஆலோசனையை தமிழக அரசு புறக்கணிப்பு செய்தது.

What happened in the legislature Description of Governor's House

ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (பிப்ரவரி 12, 2024) காலை 10:00 மணியளவில் அவையில் ஆற்றிய உரையில், சபாநாயகர், முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் பேரவைக்கு தனது மரியாதையை தெரிவித்து, தமிழக மக்களின் நலனுக்காக இந்த அமர்வு பயனுள்ளதாக அமைய வாழ்த்துகிறேன் என்று கூறி முடித்தார். அதன்பின் சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்தார். ஆளுநரின் தமிழாக்க உரை முடியும் வரை ஆளுநர் ஆர்.என். ரவி அவையில் அமர்ந்திருந்தார். சபாநாயகர் அப்பாவு உரையை முடித்ததும், திட்டமிட்டபடி ஆளுநர் ஆர்.என். ரவி தேசிய கீதத்திற்காக எழுந்தார். ஆனால் சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையின் கால அட்டவணையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக ஆளுநருக்கு எதிராக பேசினார். அவர் நாதுராம் கோட்சே மற்றும் பலரைப் பின்பற்றுபவர் ஆளுநர் என்று சபாநாயகர் அப்பாவு விரும்பத்தகாத வகையில் தனது பதவியின் கண்ணியத்தையும், சபையின் கருணையையும் குறைக்கும் வகையில் செயல்பட்டார். சபாநாயகர் அப்பாவு ஆளுநருக்கு எதிராகக் கடுமையாகத் தாக்கிப் பேசியபோது ஆளுநர் ஆர்.என். ரவி தமது பதவி மற்றும் சபையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு சபையை விட்டு வெளியேறினார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்