Skip to main content

மேட்ரிமோனி மூலம் விரித்த வலை; மாயக் குரலால் ஐடி ஊழியரிடம் 20 லட்சம் அபேஸ் செய்த ஐஸ்வர்யா என்கிற தாத்தாதிரி

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

The web spread by matrimony; Grandmother Aishwarya who cheated an IT employee of 20 lakhs by Mayakuralal

 

சென்னை புழுதிவாக்கம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரகுராம் 39 வயதான இவர் நுங்கம்பாக்கம் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நீண்ட நாட்களாக ரகுராமிற்கு திருமணம் ஆகாததால் இவரது பெற்றோர் திருமண தகவல் மையத்தில் இவரது சுய விவரத்தினைப் பதிவு செய்து வைத்திருந்தனர். சில நாட்களில் ஐஸ்வர்யா என்ற பெண்ணின் புகைப்படத்துடன் கூடிய சுயவிவரப்படம் இவரது கைப்பேசிக்கு வந்துள்ளது. 

 

தொடர்ந்து இருவரும் செல்போன்களில் பேசியுள்ளனர். செல்போன் பேச்சு வெகு நாட்கள் தொடர திடீரென ஒருநாள் ஐஸ்வர்யா தனது தாயாருக்கு உடல் நிலை சரியில்லை எனக்கூறி ரகுராமிடம் மருத்துவ செலவிற்கு பணம் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ரகுராம் 8000 ரூபாய் அனுப்பியுள்ளார். தொடர்ந்து 4 மாதங்களில் பலமுறை ஐஸ்வர்யா இவ்வாறு கேட்க ரகுராம் பணம் அனுப்பிக்கொண்டே இருந்துள்ளார். மேலும் தாயாருக்கு உடல்நிலை சரி இல்லை எனக் கூறி ஐஸ்வர்யா மற்றும் அவரது சித்தப்பா திருமண ஏற்பாடுகளையும் தட்டிக் கழித்துக் கொண்டு வந்துள்ளனர்.

 

எத்தனை நாள் கழித்து திருமணம் குறித்து கேட்டாலும் தன் அம்மாவின் உடல் நலத்தைக் காரணம் காட்டி மறுத்து வந்துள்ளார். ஐஸ்வர்யா மேலும் மேலும் பணம் வாங்கிக் கொண்டே இருந்ததால் சந்தேகம் அடைந்த ரகுராம் பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.

 

பணம் திரும்ப கேட்டதும் ரகுராமிடம் பேசிய சித்தப்பா, பணம் கேட்டால் நீங்கள் பேசிய ஆடியோவை வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரகுராம் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்ததில் ஐஸ்வர்யா மற்றும் அவரது சித்தப்பா கல்யாணராமன் என செல்போன் எண்களும் சேலம் திருப்பதி அண்ணாமலை நகரைச் சேர்ந்த தாத்தாதிரி என்பவரது பெயரைக் காட்டியது. 49 வயதான தாத்தாத்திரியை தனிப்படை அமைத்து காவல்துறையினர் கைது செய்தனர். 

 

காவல்துறையினர் தாத்தாதிரியை விசாரித்ததில் ஐஸ்வர்யா மற்றும் கல்யாணராமன் குரலில் அவரே பேசி ரகுராமை ஏமாற்றியது தெரிய வந்தது. கல்யாணக் கனவுகளுடன் இருந்த ரகுராமிடம் தொடர்ச்சியாய் பணம் பெற்று வந்தது 49 வயது ஆண் என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது.

 

தாத்தாதிரியை கைது செய்த காவல்துறையினர் அவரை விசாரித்தனர். மேலும் அவரை ரகுராமிடம் பேசிக்காட்டியது போல பேசச்சொல்லி உறுதி செய்து கொண்ட காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.