Skip to main content

எங்களுக்கு அந்த ஹெச்.எம் தான் வேணும்... அரசுப்பள்ளி குழந்தைகள் அடம்

Published on 02/09/2022 | Edited on 02/09/2022

 

We need that H.M.... Govt school children

 

மேச்சேரி அருகே, அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளிக் குழந்தைகள் வகுப்புக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள வன்னியனூரில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் பள்ளிப்பட்டி, மல்லிகுந்தம், உப்புபள்ளம், மருக்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்ளைச் சேர்ந்த 286 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக சிவகுமார் (45) என்பவர் பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி, வாழதாசம்பட்டி பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். 

 

இந்நிலையில், தலைமை ஆசிரியரின் இடமாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி குழந்தைகள் கடந்த நான்கு நாட்களாக சாலையில் அமர்ந்து போராடி வருகின்றனர். தலைமை ஆசிரியரை மீண்டும் இதே பள்ளியில் பணி அமர்த்தம் செய்யும் வரை பள்ளிக்குப் போக மாட்டோம் என்று, வியாழக்கிழமையன்று (செப். 1) மாணவர்கள் திடீரென்று நூதன போராட்டத்திலும் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு ஆதரவாக பெற்றோர்களும் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

 

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ''தலைமை ஆசிரியர் சிவகுமார் கடந்த 11 ஆண்டுகளாக வன்னியனூர் பள்ளியில் பணியாற்றி வருகிறார். அவர் இந்தப் பள்ளிக்கு வந்தபோது இங்கு 90 குழந்தைகள் படித்து வந்தனர். அவருடைய தொடர் முயற்சியால் தற்போது பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்து 286 பேர் படித்து வருகின்றனர். 

 

தனியார் பள்ளிக்கு இணையாக அரசுப்பள்ளியை மேம்படுத்தி உள்ளார். இந்த வட்டாரத்தில் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த பல குழந்தைகள் இந்தப் பள்ளியில் சேர்ந்து படித்து வருகின்றனர். இதற்குக் காரணமான தலைமை ஆசிரியர் சிவகுமாரை இடமாற்றம் செய்யக்கூடாது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்'' என்றனர். 


இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டூர் வட்டாட்சியர் முத்துராஜா, மேச்சேரி காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று மக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.