Skip to main content

''ரேஷன் அரிசி இருக்கு புளி இருக்கு ரசம் வெச்சு சாப்பிட்டுக்கிறோம்''-கொட்டித்தீர்த்த தெங்குமரஹடா கிராமம் மக்கள்!

Published on 08/03/2022 | Edited on 08/03/2022

 

'' We eat ration rice and tamarind juice '' - Tengumarahata village people!

 

நீலகிரி மாவட்டத்தில் புலிகள் காப்பகத்திற்கு மத்தியில் வசிக்கும்  தெங்குமரஹடா கிராம மக்கள் சமவெளிப் பகுதிக்குச் செல்ல விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் இதுகுறித்து கருத்துக் கேட்பு கூட்டத்தில் தங்களுக்கான மனக்குமுறலை கொட்டித்தீர்த்துள்ளனர் அக்கிராம மக்கள்.

 

பவானிசாகர் வனப் பகுதியை ஒட்டியுள்ளது தெங்குமரஹடா கிராமம். இக்கிராமத்தில் பழங்குடியினர் அல்லாத 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. புலிகள் காப்பகங்களுக்கு மத்தியில் உள்ள இக்கிராமம் வனவிலங்குகளால் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். இக்கிராமம் நீலகிரி மாவட்டத்திலிருந்தாலும் தெங்குமரஹடா கிராமத்திற்கு செல்லும் பாதை ஈரோடு மாவட்டத்தில் இருக்கிறது. கிராமத்தைச் சுற்றி 'மாயாறு' எனும் ஆறு செல்வதால் பரிசல் மூலமாகவே இந்த கிராமத்திற்கு செல்ல முடியும் என்ற நிலை இருக்கிறது. அந்த ஆற்றில் தண்ணீர் திடீரென மயமாக பெருக்கெடுத்து ஓடும் திடீரென வறண்டு காணப்படும் என்பதாலையே அதற்கு மாயாறு என்று பெயர் வைத்துள்ளனர்.

 

'' We eat ration rice and tamarind juice '' - Tengumarahata village people!

 

மழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் போக்குவரத்து என்பது முற்றிலும் நிறுத்தப்பட்டுவிடும் நிலை உள்ளது. கிராமத்தைச் சுற்றி சத்தியமங்கலம், முதுமலை புலிகள் காப்பகங்கள் இருக்கிறது. இதனால் வன விலங்குகளின் நலனைக் கவனத்தில் கொண்டு கிராம மக்களை சமவெளிக்கு இடமாற்றம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது. நீதிமன்றத்தின் பரிந்துரையை அடுத்து கிராம மக்களும் சமவெளிப் பகுதிக்குச் செல்ல விருப்பம் உள்ளதாகக் கடிதம் அளித்திருந்தனர்.

 

hh

 

இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி 10.30 மணிக்கு இது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் தெங்குமரஹடா கிராமத்தில் நடைபெற்றது. ஈரோடு, கோவை, நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சத்தியமங்கலம், முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மக்கள் தங்களுடைய மனக்குமுறலைக் கொட்டித்தீர்த்துள்ளனர்.

 

hh

 

கருத்துக்கேட்பில் கலந்து கொண்ட சுப்புலட்சுமி என்ற பெண் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''நாங்கள் இந்த ஊரை விட்டு போவதாக இருந்தால் 15 லட்ச ரூபாய் பணம், 5 சென்ட் இடம், ஒரு ஏக்கர் பட்டா பூமி எல்லாருக்கும் வேணும். சும்மா இங்கயே நாங்க ஏனோதானோனு வாழ்ந்தாச்சு. திரும்பவும் இந்த ஊரைவிட்டு போய் ஏனோதானோனு வாழ நாங்க தயார் இல்லைங்க. ஊர்ல இருக்க எல்லாரும் அப்பாவி மக்க. நாங்க இனி உஷாரா பொழைக்கணுமுங்க. எங்க ஊர் மக்களின் முடிவு இதுதானுங்க. இத கொடுத்தாதான் நாங்க போவோம். இல்லைனா பாலம் போட்டுக்கொடுங்க ஊருக்கு. நாங்க இங்கேயே இருந்துக்கிறோம். கால் கஞ்சியோ அரைக் கஞ்சியோ குடிச்சிக்கிறோம். எங்களுக்கு பாலம்தான் வேணும். எங்ககிட்ட ஓட்டெல்லாம் வாங்குறீங்க ஆனா பாலம் மட்டும் ஏன் போட்டுத்தரமாட்றீங்க. எங்கெங்கையோ இருந்து ஓட்டு கேட்டு இங்க வரீங்க. இதெல்லாம் பண்ணா ஊரவிட்டு போறோம் இல்லைனா பாலம் கட்டித்தாங்க... ரேஷன் அரிசி இருக்கு புளி இருக்கு ரசம் வெச்சு சாப்பிட்டுக்கிறோம்'' என்றார்.

 

இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் அதிகப்படியான மக்கள் ஊரை விட்டு காலி செய்ய விருப்பமில்லை என்றே தெரிவித்தனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.