Skip to main content

''நாங்கள் கேட்பது உதவியல்ல காப்பிரைட் ராயல்டி''-மீண்டும் சர்ச்சையில் 'ஜெய் பீம்'

Published on 12/06/2022 | Edited on 12/06/2022

 

'' What we are asking for is not help 'Copyright royalty' - 'Jai Bhim' in controversy again

 

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜெய் பீம்’. பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகளைப் பெற்ற இத்திரைப்படம் தற்போது வரை உலக அரங்கில் பல்வேறு விருதுகளை குவித்து வருகிறது. அதேபோல் சர்வதேச திரைப்பட விழாக்களில் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவரின் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பான உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த திரைப்படம் உருவாகி இருந்தது. ஆதரவு கருத்துக்களை எப்படி இத்திரைப்படம் பெற்றதோ அதேவகையில் திரைப்படத்திலிருந்த சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்த, எதிர்ப்புகளும் கிளம்பி இருந்தது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட ராஜாகண்ணு குடும்பத்திற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து உதவிகள் கிடைத்தன.

 

'' What we are asking for is not help 'Copyright royalty' - 'Jai Bhim' in controversy again

 

இந்நிலையில் இந்த உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட எங்களை படக்குழுவினர் யாரும் இதுவரை கண்டுகொள்ளவில்லை என கொளஞ்சியப்பன் என்பவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவருடைய வழக்கறிஞருடன் கொளஞ்சியப்பன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''93ல் நடந்த கதை இது. ராஜாக்கண்ணு என்பவர் எனது மாமா. ஆச்சி என்பது எனது அம்மா. 93ல் கம்மாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ஏதோ திருட்டு போயிருந்தது. அந்த வழக்கில் நாங்கள் அடிபடவில்லை. ராஜாக்கண்ணு குடும்பத்தை போலீசார் விசாரிக்கும் பொழுது அந்த நேரத்தில் நாங்கள் வேறு ஒரு கிராமத்திற்கு சென்றிருந்தோம். அவர்களை காவல் நிலையத்தில் வைத்து அடித்து 'உங்கள் வீட்டுக்கு யார் யார் விருந்தாளிகள் வந்தார்கள்' என கேட்டதில், 'எங்க அக்கா வீட்டு பிள்ளைகள் எல்லாம் வந்தார்கள்' என சொல்லி உள்ளார்கள். மேலும் அவர்கள் ஊருக்குப் போய்விட்டார்கள் என்று கூறியுள்ளார்கள். அந்த அடிப்படையில் போலீசார் பந்தநல்லூரில் இருந்த எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். என்னை, எனது அம்மாவை, எனது அண்ணனை என மூன்று பேரையும் அடித்து வேனில் ஏற்றிக்கொண்டு கம்மாபுரம் கொண்டுவந்தார்கள். கொண்டுவந்து எங்களை சித்திரவதை செய்தார்கள். எனது அம்மாவையும் எனது அண்ணனையும் கொச்சையாக நடத்தினார்கள். அடி தாங்க முடியாமல் நாங்கள் அங்கேயே அமர்ந்து இருந்தோம். 7:30 மணி அளவிற்கு எங்க அண்ணன், எங்க மாமா ராஜாக்கண்ணு, இன்னொரு மாமா என மூன்று பேரையும் போலீஸ் ஸ்டேஷனிலேயே வைத்துவிட்டு என்னையும், எங்க அம்மாவையும் ஊருக்கு பஸ் ஏற்றி விட்டார்கள். நாங்கள் ஊருக்கு போய் விட்டோம். அதன் பிறகு ராஜாக்கண்ணு தப்பி ஓடிவிட்டார் என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் அவரை சாகடித்துவிட்டு தப்பி ஓடியதாக சொல்லிவிட்டார்கள். இது தொடர்பாக கோர்ட்டில் கேஸ் போடப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கோவிந்தன், பாலகிருஷ்ணன் அவங்க எல்லாம் இந்த கேஸை நடத்தினார்கள். நாங்களும் கோர்ட்டில் சாட்சி சொன்னோம்.

 

அதன் பிறகு 'ஜெய்பீம்' என்ற திரைப்படத்தை எங்கள் கதையை வைத்து எடுத்தார்கள். ஆனால் ஜெய்பீம் படக்குழுவினர் எங்களுக்கென்று என்ன செய்தார்கள்?. எங்கள் கதைதானே.. எங்க அண்ணன், எங்க அம்மாவையும் கொச்சையாகவே நடத்தினார்களே... எங்களுக்கு படிப்பறிவு இல்லை. எங்களை ஆதரிக்க யாரும் இல்லை. அன்னைக்கு எல்லாமே செய்துவிட்டு இன்னைக்கு நாங்கள் அனாதையாக நிற்கிறோம். போட்டுக்கொள்ள செருப்பு கூட இல்லாமல் அனாதையாக நிற்கிறோம். எங்களைத் தேடி வருவார்கள் என்று எதிர்பார்த்தோம் ஆனால் வரவில்லை. ஆதாரத்தை எல்லாம் எனது வழக்கறிஞரிடம் கொடுத்துள்ளேன். ராஜாக்கண்ணு குடும்பத்திற்கு எப்படி உதவி செய்தார்களோ அது மாதிரி எங்களுக்கும் உதவி பண்ண வேண்டும்'' எனக்கேட்டார்.

 

jj

 

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கொளஞ்சியப்பனின் வழக்கறிஞர்,  ''இவர்கள் கேட்பது உதவி அல்ல ராயல்டி. காவல்துறை கொட்டடி சித்திரவதையில் பாதிக்கப்பட்டவர்களில் இவர் குடும்பத்தில் 4 பேர். இவருடைய அம்மா ஆச்சி, இவரது அண்ணன் குள்ளன், மாமா கோவிந்தராஜ், பெரிய மாமா ராஜாக்கண்ணு, ராஜாக்கண்ணுடைய மனைவி பார்வதியம்மாள். இவர்கள் எல்லாருமே பாதிக்கப்பட்டுள்ளார்கள். இயக்குநர் ஞானவேல் இவரை சந்தித்து இந்த கஸ்டடி சம்பவத்தை, போலீஸ் ஸ்டேஷனில் நடந்தவற்றை படமாக எடுக்கப் போகிறோம், நீங்கள் உண்மையாக அங்கு என்ன நடந்ததோ அதை எல்லாம் சொல்லுங்கள் என கேட்டு வாங்கி உள்ளார். மேலும் இந்த கதைக்கான உரிமைக்காக ஒரு கோடி ரூபாயை உங்களுக்கு அட்வான்ஸாக கொடுக்கிறோம். அதேபோல் இந்த படத்தில் வரும் வருவாயில் 20 சதவீதத்தை உங்களுக்கு கொடுக்கிறோம் என இவரிடம் நடந்த சம்பவங்களை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டதோடு, இவர் நோட்டில் எழுதி வைத்திருந்த சம்பவங்கள் தொடர்பான குறிப்பை வாங்கிக் கொண்டு சென்றுள்ளார். அதன் பிறகு இவரை திரும்பிக்கூட பார்க்கவில்லை. இந்த திரைப்படத்தை பார்த்த பிறகு இவர்கள் அதிர்ச்சியடைந்து நம்முடைய கதையை இவர்கள் சினிமாவாக எடுத்துள்ளார்கள் அதுவும் நம்முடைய அனுமதி இல்லாமல் என்பதை தெரிந்துகொண்டனர். காப்பிரைட் சட்டத்தின்படி கதைக்கான ஆத்தர் கிட்ட பர்மிஷனை பெற எழுத்துப்பூர்வமாக ஒரு கடிதத்தை வாங்க வேண்டும். இவர்கள் வாழ்க்கையில் நடந்த துயரச் சம்பவத்தை இவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அனுமதி கடிதம் இல்லாமல் படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பது குற்றச்சாட்டு. ஒரு பட்டியல் சமுதாயத்தின் அறிவு சொத்தை திருடி யாரும் பணம் சம்பாதிக்க அனுமதிக்க முடியாது, சட்டம் அதை அனுமதிக்காது. அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்திருக்கிறோம். தமிழக காவல்துறை சட்டப்படி இதில் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். அப்படி எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தின் மூலம் எங்களது உரிமையை நிலைநாட்டுவோம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடலூர் மாவட்டத்தில் மீண்டும் ஒரு 'ஜெய்பீம்'

Published on 24/01/2024 | Edited on 25/01/2024
Another jai bhim in Cuddalore District

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடந்த 2015 ஆம் ஆண்டு மும்தாஜ் என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிந்த நெய்வேலி காவல்துறையினர் மேல்பட்டாம்பாக்கம் அருகே பி.என் பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற கூலி தொழிலாளியை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

அவரிடம் ஒரு வார காலம் விசாரணை செய்தனர். பின்னர் நெய்வேலி காவல்துறையினர் அவரின் கை மற்றும் கால்களின் நகங்களை பிடுங்கிய நிலையில் மிகவும் கவலைக்கிடமான முறையில் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியன் சிகிச்சை அளித்த மருத்துவரிடம் காவல்துறையினர் செய்ததை வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனையிலே சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் உயிரிழந்தார். இதை இயற்கை மரணமாக மாற்றுவதற்கு முயன்றதையெடுத்து இதுகுறித்து அவரது மனைவி ரேவதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட காவல்துறை மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில்  பல்வேறு கட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றது.

இதனையொட்டி இந்த வழக்கு நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் 174 சந்தேக வழக்காக பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்கு சி பி சி ஐ டி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இவர்களின் விசாரணையில் அப்போது நெய்வேலி காவல் ஆய்வாளராக இருந்த ராஜா தற்போது (வடலூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக உள்ளார் ) இவருடன் உதவி ஆய்வாளராக இருந்த செந்தில்வேல் மற்றும் காவலர் சௌமியன் உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சுமத்தி சிபிசிஐடி காவல்துறையினர் கொலை அல்லாத மரணம் என்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இதை அறிந்து கடலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட கட்சியினர் மாவட்டம் முழுவதும் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை மற்றும் எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை தடுப்பு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி கடந்த 2022 ஆம் ஆண்டு ஆய்வாளர் ராஜா உள்ளிட்ட மூன்று காவல்துறையினர் மீது கொலை வழக்கு மற்றும் எஸ்.சி எஸ்.டி பிரிவுகளை சேர்த்துக்கொள்ளலாம் என உத்தரவிட்டது.

அப்போது அதிமுக ஆட்சி காலத்தில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டிருந்த ஆய்வாளர் ராஜா, திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் மீண்டும் வடலூர் காவல் நிலையத்திற்கு ஆய்வாளராக அமர்த்தப்பட்டார். இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொலை குற்றவாளியான ராஜாவை மாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்போது போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட ஆய்வாளர் ராஜா தனது செல்வாக்கை பயன்படுத்தி அரசியல் கட்சி தலைவர்கள் மூலமும் பிற முக்கிய நபர்கள் மூலமும்  சுப்பிரமணியன் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு நெருக்கடிகளும் பிரச்சனைகளும் கொடுத்து வந்தனர்.

கொலை வழக்கு மற்றும் எஸ்.சி, எஸ்.டி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் குற்றவாளிகளான ஆய்வாளர் ராஜா உள்ளிட்ட 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டியும் விடுவிக்க கோரியும் மனு தாக்கல் செய்தனர்.

இதனால் சுமார் ஒரு வருடமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் ரேவதியின் சார்பாக உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் திருமூர்த்தி மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 11.1.2024 அன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் 2 மாதத்திற்குள் இவ்வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன் அடிப்படையில் ஜனவரி 24-ஆம் தேதி கடலூர் சிறப்பு எஸ்.சி, எஸ்.டி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஜீவக்குமார் மற்றும் வழக்கறிஞர்கள் ஜோதிலிங்கம், லெனின், மேரி, சுரேஷ், ஆழ்வார், பரமேஸ்வரன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன் மற்றும் செயற்குழு உறுப்பினர் ராஜேஷ், வாதியான ரேவதி மற்றும் குற்றவாளியான ஆய்வாளர் ராஜா, உதவி ஆய்வாளர் செந்தில்வேல், சௌமியன் உள்ளிட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

3 மாதத்தில் தண்டனை கிடைக்கும் என தெரிந்தும் ராஜா அதுவரை எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறார். இதை கேட்டால் சக காவலர்களை மிரட்டும் தொனியில் பேசுவதாகவும் இவர் செய்யும் செயலால் கூட இருக்கும் காவலர்களுக்கும் பிரச்சனை ஏற்படலாம் என்ற பயம் உள்ளது என  காவல்துறையினரே கூறுகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கம்மாபுரம் காவல் நிலையத்தில் செங்கேணி என்பவரின் கணவர் ராசாகண்ணுவை கம்மாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் திருட்டு வழக்கில் அழைத்துச் சென்று அவரை கொலை செய்த சம்பவத்திற்கு நீதிகேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சம்பந்தப்பட்ட ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினருக்கு தண்டனை கிடைத்தது.  இதை ஜெய்பீம் படம் மூலம் அனைத்து மக்களுக்கும் எளிய முறையில் காட்சிப்படுத்தப்பட்டது. அதே பாணியில் மீண்டும் ஒரு கொலை பக்கத்துக் காவல் நிலையமான நெய்வேலி காவல் நிலையத்தில் அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

டாப் இந்தியத் திரைப்படப் பட்டியல் - சூர்யா நிறுவனம் மகிழ்ச்சி

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
suriya produced 2 movies in imdb new top 250 indian list

ஐ.எம்.டி.பி என்ற இணையதளம் உலகத் திரைப்படங்கள், வெப் தொடர்கள் உள்ளிட்ட பலவற்றைப் பற்றிய தகவல்களை வழங்கும் ஒரு பிரபலமான இணையதளம். மேலும், ஆன்லைன் மூலம் மக்கள் அளிக்கும் புள்ளிகளை வைத்து சிறந்த படம் குறித்த பட்டியலை மக்களுக்குத் தொகுத்து வழங்குகிறது. இந்த இணையதளத்தில் டாப் இடத்தில் இடம்பெறுவது ஒரு அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. இதில் பொதுமக்களில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளையும் ரேட்டிங்கையும் பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த இணையதளம் ஒவ்வொரு ஆண்டின் இறுதியில், மக்களின் பெரும் கவனங்களைப் பெற்ற படங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இம்மாதம் வரை டாப் 250 இந்தியத் திரைப்படங்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 12 மற்றும் 13 இடங்களில் சூர்யா நடித்த ஜெய்பீம் மற்றும் சூரரைப் போற்று உள்ளிட்ட படங்கள் இடம்பிடித்துள்ளன. இதனை இந்த இரு படங்களைத் தயாரித்த 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அவர்களது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளனர். 

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘ஜெய்பீம்’. இப்படத்தில் சந்துரு என்கிற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் பொருத்தமாக நடித்திருந்தார் சூர்யா. மேலும் மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ், பிரகாஷ்ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் சிறப்பாகத் தங்களது கதாபாத்திரங்களில் நேர்த்தியான நடிப்பினைக் கொடுத்திருந்தார்கள். இசைப் பணிகளை ஷான் ரோல்டன் மேற்கொண்டிருந்தார். 

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா முரளி நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான படம் 'சூரரைப் போற்று'. ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் 68வது தேசிய விருது விழாவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் ஐந்து விருதுகளை வென்றது.