சேலம் அருகே பேருந்தில் ஆண் நண்பருடன் ஒன்றாக அமர்ந்து பயணித்த கல்லூரி மாணவியை புகைப்படம் எடுத்து மிரட்டியதோடு மட்டுமில்லாமல் பெற்றோரிடம் சொல்லாமல் இருக்க வாட்ஸப்பில் வீடியோ காலில் இளம்பெண்ணை வரும்படி வற்புறுத்தி ஆடையை களையச்செய்து வீடியோவாக பதிவு செய்து அதை வாட்ஸ்அப்பில் நண்பருடன் பகிர்ந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் செவிலியர் பயிற்சி படிப்பு முடித்து நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தப் பெண்ணின் வீட்டு சுற்றுவட்டார பகுதியில் அந்த பெண் குறித்த வாட்ஸ்அப் வீடியோ காட்சி ஒன்று வைரலானது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை தெரிந்து கொண்ட அந்த மாணவியின் பெற்றோர் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் அருகே உள்ள ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் பெற்றோர் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. தனது பெண்ணின் வீடியோவை பரப்பிய வரதராஜன், விஜயகுமார், சங்கர் ஆகியோர் மீதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். காவல் நிலையத்திற்கு சென்றதால் தன் பெயர் கெட்டுவிடும் என்று அஞ்சிய அந்தப் பெண் வீட்டில் இருந்த மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிகொல்லி மருந்தை குடித்து விட்டு தற்கொலை முயன்றுள்ளார்.

தற்கொலைக்கு முயன்ற அந்த மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் பெற்றோர்கள். இதற்கிடையில் அந்த மாணவியின் ஆபாச வீடியோ குறித்து தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியானது.
சம்பந்தப்பட்ட அந்தப் பெண் தற்போது நர்சாக பணியாற்றி வரும் நிலையில் அவர் மாணவியாக கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவரது ஆண் நண்பருடன் பேருந்தில் ஒன்றாக ஒரே இருக்கையில் அமர்ந்து பயணித்துள்ளார். இதனை கவனித்த அதே பகுதியைச் சேர்ந்த வரதராஜன் என்ற நபர் அதனை செல்போனில் படம்பிடித்து வைத்துள்ளான். அதோடு மட்டுமல்லாமல் அந்த மாணவியிடம் அந்த புகைப்படத்தை காட்டி உன் பெற்றோரிடம் இந்த புகைப்படத்தை காட்டி விடுவேன் நீ காதலித்துக் கொண்டு ஆண்களுடன் சுற்றுகிறாய் என்று உன் வீட்டில் சொல்லி விடுவதாக மிரட்டியுள்ளான். வீட்டில் சொல்லாமல் இருக்க வேண்டுமென்றால் தன்னுடன் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேச வேண்டுமெனவும் பிளாக்மெயில் செய்துள்ளான். வாட்ஸப்பில் பேசினால் யாருக்கும் தெரியாது இருவருக்கு மட்டுமே இரகசியமாக இருக்கும் எனவும் கூறியுள்ளான்.

அந்த கொடூரனின் உண்மைமுகம் தெரியாத அந்த பெண் மிரட்டலுக்கு பயந்து அவ்வப்போது அவனுடன் வீடியோ காலில் பேசி வந்துள்ளார். சம்பவத்தன்று மிரட்டலின் உச்சகட்டமாக வீடியோ காலில் அந்தப் பெண்ணின் ஆடைகளை களைய சொல்லி உள்ளான் அந்த கொடூரன். வேறு வழி தெரியாத அந்த இளம் பெண் மிரட்டலுக்கு பயந்து கல்லூரியில் உள்ள ஒரு மறைவான இடத்திற்கு சென்று ஆடைகளை களைந்துள்ளார். அதை வாட்ஸ்அப் வீடியோ காலில் வரதராஜன் பதிவு செய்துள்ளான். அந்த வீடியோவை வெளியிட்டு விடுவதாகவும் கூறி தன்னுடைய ஆசைக்கு மேலும் இணங்க வேண்டும் என தொடர்ந்து மிரட்டும் தொனியில் பேசியுள்ளான்.

இதனை தாங்க முடியாத அந்த இளம்பெண் வரதராஜனுடன் பேசுவதையே முற்றிலுமாக நிறுத்திக் கொண்டார். இந்நிலையில் வரதராஜன் அந்த கல்லூரியில் அந்த பெண் படிக்கும்பொழுது சென்ற கல்லூரி பேருந்தில் ஓட்டுநராக இருந்த பேருந்து ஓட்டுநர் விஜயகுமார் என்பவனிடம் உங்கள் கல்லூரி மாணவியின் வீடியோ என்று அந்த ஆபாச வீடியோவை பகிர்ந்துள்ளான். அவனும் இந்த வீடியோவை அவனது நண்பரான ஷங்கர் என்பவனிடம் காண்பிக்க அவனும் தன் பங்கிற்கு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளான்.

இப்படி பகிரப்பட்ட இந்த வீடியோவானது சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினர் ஒருவரின் கண்ணில் பட வீடியோ விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவத்தில் வீடியோபதிவு செய்து மிரட்டிய வரதராஜன் தலைமறைவாக உள்ள நிலையில், கல்லூரி பேருந்து ஓட்டுநர் விஜயகுமார், சங்கர் ஆகிய இருவரையும் காவல்துறையினர் உடனடியாக கைது செய்துள்ளனர்.
இதுபோன்று புகைப்படங்கள் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டினாலோ அல்லது அச்சுறுத்தினாலோ பெண்கள் அஞ்சத் தேவையில்லை என்று எச்சரிக்கும் காவல்துறை, இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் காவல்துறையின் உயர் அதிகாரிகளை நேரடியாக சந்தித்து புகார் அளிக்க வேண்டும் எந்த காரணத்தைக் கொண்டும் வாட்ஸப்பில் புகைப்படங்களை பகிர்வது வீடியோ காலில் பேசுவதையோ தவிர்ப்பது நல்லது என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.