Skip to main content

மனையோ பணமோ இரண்டில் ஒன்று வேண்டும்.. கோட்டாட்சியர் அலுவலகத்தில் போராடிய மக்கள்! 

Published on 07/07/2022 | Edited on 07/07/2022

 

  want either land or money.

 

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை பேரூராட்சியிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் மொத்தம் 20 நகர் பிரிவுகளை உருவாக்கி மனை விற்பனை செய்ய மாத தவணையில் பணம் செலுத்தினால் குலுக்கல் முறையில் மாதாமாதம் தங்க நகைகள், வெள்ளி நகைகள், மோட்டார் சைக்கிள், டி.வி, பிரிஜ், வாஷிங்க் மிஷீன் போன்றவை கிடைக்கும், அதைத்தாண்டி கடைசி மாதம் பணம் கட்டி முடித்ததும் மனை வழங்கப்படும் எனக் கவர்ச்சி விளம்பரங்களைக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்ட சிலர் செய்துள்ளனர்.

 

இதனை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் மாதாமாதம் தவணை முறையில் கடந்த 2012 ஆண்டு முதல் பணம் செலுத்தி உள்ளனர். இதில் மனை வாங்க பணம் கட்டி ஏமாந்த பெண்கள், ஒவ்வொருவரும் மாதம் ரூ. 1500 துவங்கி ரூ. 2500 வரை பல ஆண்டுகள் செலுத்தி உள்ளனர். குறைந்தபட்சம் ரூபாய் 65,000 துவங்கி ரூபாய் 2,50,000 வரை கட்டி உள்ளனர். 10 ஆண்டுகள் கடந்தும் இதுவரை எந்த நகர் உரிமையாளர்களும் மனையை பதிவு செய்து கொடுக்கவில்லை. வாங்கிய பணத்தையும் திரும்பிக் கொடுக்கவில்லை. தங்கள் சேமிப்பு பணத்தை மனை பிரிவு வாங்க கொடுத்து அப்பாவி மக்கள் பரிதவித்தனர்.

 

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் 240 நபர்கள், தங்கள் மனை பிரிவுக்கு கட்டிய தொகையே ரூபாய் 1,66,55,680 என்று கட்டிய  ரசீதுடன் புகார் செய்துள்ளனர். இன்னும் நூற்றுக்கணக்கான மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். கோடி கோடியாய் மக்களிடம் பணம் பெற்றவர்கள் உல்லாசமாகச் சுற்றித் திரிகின்றனர்.

 

எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனை அல்லது பணம் என்ற இயக்கம் கடந்த மாதம் துவக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டம் நடத்தப்பட்டது, சிதம்பரம் டி.எஸ்.பியிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று, சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் விஜய் தலைமை தாங்கினார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்ட குழு உறுப்பினர் ராஜா, பரங்கிப்பேட்டை நகர செயலாளர் வேல்முருகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஜெயசீலன், ஹசம் முகமது, பாண்டியன், குலஞ்சியப்பன், அருள்தீபன், லெனின் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். சரியான நடவடிக்கை இல்லையென்றால் மனைக்கு பணம் கட்டி ஏமாந்த அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து அனைத்து தரப்பினர் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.


சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.