Skip to main content

மான் வேட்டையில் ஈடுபட்ட இளைஞரை மடக்கிய வனத்துறை; இருவர் தலைமறைவு

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

virudhachalam reserve forest deer incident forest ranger enquiry

 

சேலம், பெரம்பலூர், கடலூர், திருச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை ஒட்டி நீண்டு கிடக்கிறது வனத்துறைக்குச் சொந்தமான காப்புக்காடுகள். இந்த காட்டில் மான்கள், மயில்கள், முயல்கள் காட்டுப் பன்றிகள், எறும்பு திண்ணிகள், உடும்புகள் என ஏராளமான வன விலங்குகள் வாழ்கின்றன. இந்த நிலையில் விருத்தாசலம் வனச்சரக அலுவலர் ரகுவரன் தலைமையில் வனவர்கள் பன்னீர்செல்வம், சிவக்குமார், வனக்காப்பாள்கள் ஆறுமுகம், நவநீதகிருஷ்ணன், ஜெயவர்தன் ஆகியோர் வேப்பூர் பகுதியில் உள்ள கிருஷ்ணாபுரம் வனக்காட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்பொழுது காட்டுக்குள் ஒரு இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்தனர். சந்தேகத்திற்கிடமான முறையில் காட்டுக்குள் திரிந்த அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்ய வனத்துறையினர் முயன்றனர். அதற்குள் இருசக்கர வாகனத்தில் வந்த மூவரில் இருவர் இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்து மான் ஒன்றை கீழே போட்டுவிட்டு தப்பி ஓட்டம் பிடித்தனர். அவர்களை துரத்திச் சென்றதில் ஒருவர் மட்டும் வனத்துறையினர் கையில் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் இறையூர் கிராமத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் மகன் யாக்கோப் (வயது 29) என்பது தெரியவந்தது. தப்பிச் சென்ற இருவரும் அதே இறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஜோசப் ராஜ், மொட்டையன் என்பது தெரிய வந்தது.

 

யாக்கோபிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மான் நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த நிலையில் இருந்தது. அவர் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியில் மேலும் இரண்டு குண்டுகள் இருந்தன. இதையடுத்து வேட்டைக்காக அவர்கள் பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், வனத்துறையினர் பிடிபட்ட யாக்கோப்பிடம் விசாரணை மேற்கொண்டு வருவதோடு தப்பிச் சென்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்பதாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.