Skip to main content

கஞ்சா போதையில் ரகளை...தற்கொலை செய்துகொண்ட மாணவனை தூக்கிச் சென்ற சக மாணவர்கள்

 

viral incident in namakkal- police investigation

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனியார் கல்லூரியில் பொறியியல் பயின்று வந்த மாணவர் ஒருவர் கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், சக மாணவர்களே உயிரிழந்த மாணவனின் உடலை தூக்கிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ளது ஏ.கே.சமுத்திரம். அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராமர் என்பவரின் மகன் சதீஷ் இ.சி.இ பிரிவில் நான்காம் ஆண்டு பயின்று வந்தார். மாணவர் விடுதியில் தங்கி பயின்று வந்த நிலையில் சதீஷ் நேற்று ராசிபுரம் அருகே உள்ள பாலப்பாளையம் பகுதியில் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

 

இது தொடர்பாக சதீஷை கைது செய்த போலீசார் அழைத்துச் சென்று எச்சரித்தனர் என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட சதீஷ் கல்லூரி விடுதியில் உள்ள அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவரின் தற்கொலை குறித்து விடுதி காப்பாளர் புதுசத்திரம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். ஆனால் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே சக மாணவர்கள், உயிரிழந்த சதீஷின் உடலை தூக்கிச் சென்றனர். இந்த காட்சிகள் விடுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே மாணவன் உடல் விடுதி அறையில் இருந்து அகற்றப்பட்டது ஏன்? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !