Skip to main content

முதல்வரின் கவனத்திற்காக காத்திருக்கும் கடைக்கோடி கிராம மக்கள்!!

Published on 21/06/2021 | Edited on 21/06/2021
villagers waiting for the attention of the Chief Minister

 

தமிழ்நாட்டிலேயே நிர்வாக ரீதியாக அதிக நடைமுறைச் சிக்கல் உள்ளவை மாநிலத்தின், மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள கிராமங்கள்தான். இப்படியான சிக்கலில் சிக்கி சிரமப்படும் சில கிராமங்களும் அவர்களின் கோரிக்கைகளும் புதிய முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வைக்குப் போகுமா? புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் பகுதிக்குட்பட்ட ஐந்து பஞ்சாயத்துக்கள் மற்றும் அருகிலுள்ள பஞ்சாயத்துக்கள் விவசாயத்தையே பெரிதும் நம்பியிருக்கும் இந்தப் பின்தங்கிய மக்கள் அரசு நலத்திட்டங்களைப் பெற திசைக்கு ஒன்றாக இருக்கும் மாவட்ட, வட்ட, ஒன்றிய அரசு அலுவலகங்கள் தேடிச் செல்ல வேண்டியிருப்பதால் வீண் அலைச்சலும், அதனால் பண விரயமும் ஏற்படுகின்றன.

 

மேலும், அரசு அதிகாரிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் ஏம்பல் வட்டாரம் மிகவும் பின்தங்கிய பகுதிகளாக உள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஏம்பல் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் வட்டார வளர்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளர் ப. பேரின்பநாதன், கடந்த முப்பது ஆண்டுகளாக உட்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், நீர்நிலை மேம்பாடு மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் எந்தப் பெரிய திட்டங்களும் செயல்படுத்தப்படாமல் எங்கள் பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருகிறது. மாவட்டத்தின் கடைக்கோடியில் ஏம்பல்  வட்டாரம் இருப்பதால் பெரும்பாலான மாவட்ட உயர் அதிகாரிகள் எங்கள் வட்டாரத்திற்குவந்து பல வருடங்கள் ஆகின்றன, ஆட்சியர் உட்பட.

 

திசைக்கு ஒன்றாக மாவட்ட, வட்ட, ஒன்றிய அரசு அலுவலகங்கள் வெவ்வேறு நகரங்களில் அமைந்துள்ளதால், மக்கள் ஒருநாளில் முடிக்க வேண்டிய பணிக்கு பல தினங்கள் பல ஊர்களுக்குச் சென்றே பணி முடிக்கும் நிலை உள்ளது. எங்கள் பின்தங்கிய கடைகோடி மக்களின் பிரச்சனைகளைக் களையவும், வளர்ச்சித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தவும் மற்றும் நிர்வாகத்தை ஒருமைப்படுத்தவும் (Centralized administrative offices and complex) ஏம்பலை தலைமையகமாக கொண்டு புதிய வட்டம் மற்றும் ஒன்றியம் உருவாக்கப்பட வேண்டும். 10-15 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மற்ற பின்தங்கிய பஞ்சாயத்துகளை இணைத்து இப்புதிய வட்டம் ஒன்றியம் உருவாக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டிலேயே நிர்வாக ரீதியாக அதிக நடைமுறை சிக்கல் உள்ளவை எங்கள் 5 பஞ்சாயத்துகள். (ஏம்பல், மதகம், குருங்களூர், இரும்பாநாடு மற்றும் திருவாக்குடி) 

 

1. தாலுகா: ஆவுடையார் கோவில் - 16 கி.மீ

2. ஒன்றியம்: அரிமளம் - 32 கி.மீ

3. நீதிமன்றங்கள்: திருமயம், அறந்தாங்கி - 37 கி.மீ

4. பதிவு அலுவலகம் - புதுப்பட்டி  20 கி.மீ

5. மாவட்ட அலுவலகங்கள் - புதுக்கோட்டை  51 கி.மீ 

6. சட்டமன்றம் அலுவலகம் - அறந்தாங்கி  - 32 கி.மீ

7. நாடளுமன்ற அலுவலகம் - இராமநாதபுரம் - 90 கி.மீ

8. பொதுப்பணித்துறை அலுவலகங்கள்  - திருமயம் ஆவுடையார் கோவில்

9. தேசிய வங்கி கிளை - அரிமளம்

10. மின்வாரிய அலுவலகம் - ஆவுடையார் கோவில்

 

இந்த ஊர்கள் அனைத்தும் ஒவ்வொரு திசையில் உள்ளது. முன்னாள் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இரத்தினசபாபதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் 17 மார்ச் 2020 அன்று மிக வேகமாக வளர்ந்துவரும் நகரான ஏம்பலை மையமாக கொண்டு புதிய வட்டம்   உருவாக்க வேண்டிய அவசியம் குறித்து கோரிக்கை எழுப்பியுள்ளார். ஏம்பல் தலைமையகமாக கொண்டு புதிய வட்டம் மற்றும் ஒன்றியம் அமைப்பதன் மூலம் மிகச் சிறப்பாக திட்டங்களை நிறைவேற்றும். அதேவேளையில் மிகவும் பின்தங்கிய எங்கள் வட்டாரம் 5 ஆண்டுகளில் முழு தன்னிறைவு அடைவதோடு ஏம்பல் வட்டாரம் மற்றும் 15 பஞ்சாயத்துகள் பெருவளர்ச்சி பெறும் என கருத்து தெரிவித்தார். 

 

சிவகங்கை நாடளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஏம்பல் வட்டார மக்களின் வட்டம், ஒன்றிய கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சருக்கு கடிதம் அளித்துள்ளார். ஏம்பல் வட்டார சட்டமன்ற, நாடளுமன்ற உறுப்பினர்கள், புதுக்கோட்டை மாவட்ட அமைச்சர்கள் ஆகியோர் இணைந்து முதல்வர், வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஆகியோரின் துணையோடு ஏம்பல் புதிய வட்டம் மற்றும் ஒன்றிய கோரிக்கையை நிறைவேற்றிவரும் பட்ஜெட் கூட்டதொடரில் முதல்வர் ஏம்பல் புதிய வட்டம் ஒன்றியம் உருவாக்கத்தை அறிவிக்க வேண்டும் என்பதே ஏம்பல் வட்டார பொதுமக்களின் எதிர்பார்ப்பார்பாக உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.