![The villagers tied the young man to a pole](http://image.nakkheeran.in/cdn/farfuture/fj0-PfKOhnKm170LBNyJ1W41MvHCYhogyknTBHvH3hM/1693455677/sites/default/files/inline-images/a1298.jpg)
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் இளைஞர் ஒருவர் உருட்டுக்கட்டை, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இரவில் வலம் வந்து வீட்டில் இருப்பவர்களை மிரட்டி பணம் பறித்த சம்பவம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து அவரைக் கரண்ட் கம்பத்தில் ஊர்க்காரர்கள் கட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ளது பரசுராமன்பட்டி. இந்த பகுதியைச் சேர்ந்த சில வீடுகளில் அண்மைக் காலமாகவே திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், ஒருவர் இரவு நேரத்தில் சுற்றித் திரிந்து வருவதாகவும், மிரட்டி திருட்டில் ஈடுபடுவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இரவு வேளைகளில் கண்காணிப்பில் ஈடுபட்டதில் உருட்டுக் கட்டையுடன் திரிந்தது ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நபர் என்பது தெரிய வந்தது. அவரைப் பிடித்த அப்பகுதி மக்கள், ஊர் நடுவில் இருக்கும் கரண்ட் கம்பத்தில் கட்டிப் போட்டனர். பின்னர் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அந்த இளைஞர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.