Skip to main content

விசாரணைக்கு வந்த போலீஸை முற்றுகையிட்ட கிராம மக்கள்

Published on 08/09/2022 | Edited on 08/09/2022

 

The villagers besieged the police who came to investigate!

 

விழுப்புரம் அருகே உள்ள சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(48). இவர், சென்னையைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் மூலம் டெல்லியைச் சேர்ந்த மொத்த துணி வியாபாரி ஒருவரிடம் இருந்து மொத்தமாக துணிகளை வாங்கி வந்து விழுப்புரத்தில் சில்லறை விற்பனை செய்து வந்துள்ளார். ஆனால், கரோனா பரவல் காரணமாக துணி வியாபாரம் பாதிக்கப்பட்டது. இதனால் டெல்லியில் துணி வாங்கிய வகையில் அந்த மொத்த வியாபாரிக்கு செலுத்த வேண்டிய உரிய தொகையை திருப்பி செலுத்த முடியாமல் இருந்துள்ளார் செந்தில் குமார். 

 

இந்த நிலையில், டெல்லி துணி வியாபாரி அங்குள்ள போலீசில் செந்தில்குமார் மீது புகார் கொடுத்துள்ளார். டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னையைச் சேர்ந்த ஜெயப்ரகாஷ் என்பவரை கூட அழைத்துக்கொண்டு விழுப்புரம் வந்துள்ளனர். சாலாமேடு பகுதியில் செந்தில் குமாரை டெல்லி போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது ஜெயப்பிரகாஷ் மூலம் துணி வாங்கிய வகையில் பாக்கி தர வேண்டிய பணத்தை விரைவில் செலுத்துகிறேன் என செந்தில்குமார் கூறியுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனையில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார் செந்தில்குமார். அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 

 

இதைக் கண்ட செந்தில்குமார் உறவினர்கள் திரண்டு வந்து விசாரணைக்கு வந்திருந்த டெல்லி போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். உள்ளூர் போலீசாரிடம் அனுமதி பெறாமல் கைது செய்யக் கூடாது என்று வாக்குவாதம் செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று டெல்லியில் இருந்து வந்திருந்த போலீசாரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பிறகு செந்தில்குமாரிடம் டெல்லி போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் கொடுத்துவிட்டு திரும்பி சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உச்ச நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்ட ராம்தேவ்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Ramdev apologized publicly to the Supreme Court!

ஆங்கில மருத்துவம் தொடர்பாக தவறான தகவல்களை விளம்பரம் செய்ததற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது ராம்தேவும், பாலகிருஷ்ணாவும் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதாகவும் வழக்கறிஞர் கூறினார். இவ்வாறு தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (16.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் பதஞ்சலி ஆயுர்வேதத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பான விசாரணையில் கலந்து கொள்ள உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி தெரிவித்தார்.

இதனையடுத்து பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறி விளம்பரம் செய்ததற்காக நேரில் ஆஜாராகி மன்னிப்பு கேட்டார். அப்போது, “தவறாக கொடுத்த விளம்பரத்தை நியாயப்படுத்தவில்லை. உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை எதிர்காலத்தில் மீற மாட்டேன். பொது மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்” என ராம்தேவ் உறுதியளித்தார். இதனையடுத்து மனுதாரர்கள் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.