![Video of school children being misled; Teacher suspended](http://image.nakkheeran.in/cdn/farfuture/bdDHtd8kmD7JzJfDT3IvVOw-UlcBTPhq8IlQLSBcCQo/1706809300/sites/default/files/inline-images/a4641_0.jpg)
நெல்லையில் பள்ளிக் குழந்தைகளை தவறான முறையில் பேச வைத்து ஆசிரியர் வீடியோ வெளியிட்டதாகப் புகார் எழுந்த நிலையில், தற்போது வீடியோவை வெளியிட்ட ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கல்வித்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அரசுப் பள்ளியில் இரண்டே ஆசிரியர்கள் மட்டும் வேலை பார்த்து வருகின்றனர். இதில் மங்களம் என்ற ஆசிரியருக்கு மற்றொரு ஆசிரியருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவதூறு பரப்பும் நோக்கில் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் தவறான விஷயத்தை தெரிவித்து பாலியல் ரீதியாகப் பேச வைத்து அதை வீடியோவாகப் பதிவு செய்து ஆசிரியர் மங்களம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ காட்சிகள் வலைத் தளங்களில் வைரலான நிலையில், அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் உறுப்பினர்கள் மூலமாக போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், ஆசிரியர் மங்களம் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கல்வித்துறை சார்பாகவும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மங்களம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரையும் பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.