Skip to main content

விழுந்த மரம் எழுந்து நின்ற அதிசயம்; வழிபாடு செய்யும் கிராம மக்கள்

 

vellore kizhvaithiyaankuppam temple tree incident 

 

வேலூர் மாவட்டம் கீழ்வைத்தியான்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சனிக்கிழமை இரவு சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்து மின் கம்பங்கள், தென்னை, வாழை உள்ளிட்ட மரங்கள் சேதம் அடைந்தன. கேவி குப்பம் அடுத்த வேப்பங்கநேரி ஊராட்சிக்கு உட்பட்ட ரயில்வே கேட் ஒட்டிய பகுதியில்  படவேட்டு அம்மன் ஆலயம் உள்ளது. இந்த படவேட்டு அம்மன் ஆலயம் அருகில் சுமார் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் உள்ளது.

 

சூறாவளிக் காற்றுடன் பெய்த ஆலங்கட்டி கனமழையால் கோவில் அருகே இருந்த அரச மரமும் வேரோடு சாய்ந்து கீழே விழுந்தது. வேரோடு சாய்ந்த அரசமரத்தை ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் மார்ச் 23 ஆம் தேதி மரக்கிளைகளை வெட்டும் பணியில் வேலையாட்கள் ஈடுபட்டனர். மரத்தின் அடிப்பகுதியை பகுதி பகுதியாக வெட்டாமல் விட்டுச் சென்றனர். இந்நிலையில் மார்ச் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை படவேட்டு அம்மன் கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் வேரோடு சாய்ந்து தரையில் கிடந்த அரச மரம் 'தானாக' எழுந்து நின்றது கண்டு  கிராம மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். மேலும் பக்தி பரவசம் ஆகிவிட்டனர்.

 

வேருடன் சாய்ந்து தரையில் கிடந்த அரச மரம் தானாக எழுந்து நின்ற சம்பவம் சுற்றுவட்டார கிராமப் பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. தகவல் அறிந்த சுற்று வட்டார கிராம பகுதியில் இருந்து வந்த ஏராளமான பெண்கள், சாய்ந்து கிடந்து பின் எழுந்து நின்ற அரச மரத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி, அருள் வந்து ஆடியும் வழிபாடு செய்து வருகின்றனர். கனமழையால் கீழே விழுந்த மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டதால் மரத்தின் எடை குறைந்து அடிப் பகுதியின் கனத்தால் மரம் தானாக எழுந்து நின்றதால், கிராம மக்கள் மரத்திற்கு மஞ்சள் குங்குமம் வைத்து சாமி வழிபாடு செய்யும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !