வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் கன்சால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பரத் (30). ஆட்டோ ஓட்டுநரான இவர் பொங்கல் திருநாளான இன்று தெருவில் நடந்து வந்த போது, அதே பகுதியை சேர்ந்த மைக்கேல் என்பவரால் அடித்துக்கொள்ளப்பட்டுள்ளார். முன் விரோதம் காரணமாக மைக்கேல் இரும்பு கம்பியால் ஆட்டோ ஓட்டுநர் பரத்தை தலையின் பின்பக்கமாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் பரத் மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட அங்கிருந்த மக்கள் உடனடியாக அவரை சி.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பலியானார்.

உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த வேலூர் வடக்கு காவல்துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று முன் தினம் சைதாப்பேட்டையில் ஆட்டோ ஓட்டுநர் அய்யப்பன் வெட்டிகொல்லப்பட்ட நிலையில் இன்று சேண்பாக்கத்தில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் அடித்துகொல்லப்பட்டுள்ளார். வேலூர் பகுதியில் அடுத்தடுத்து கொலைகள் நடப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.