Skip to main content

வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட சிறப்பு அதிரடிப் படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி வழக்கு

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

ddd

 

வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட சிறப்பு அதிரடிப் படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாகப் பதில் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

1993ஆம் வருடம் வீரப்பனைப் பிடிப்பதற்காகத் தமிழ்நாடு, கர்நாடகா இரு மாநில அரசுகளும் கூட்டு ஒப்பந்தத்தின் பெயரில் சிறப்பு அதிரடிப்படை ஒன்றை அமைத்து மலையோர கிராமங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில் வீரப்பன் நடமாட்டமுள்ள மலையோர கிராம மக்களைச் சந்தேகத்தின் பெயரில் படித்துச் சென்று சட்டவிரோதமாகச் சித்ரவதை முகாம்களில் வைத்து சித்திரவதை செய்து பாலியல் வன்முறை, திட்டமிடப்பட்ட மோதல் சாவுகள், ஒன்பதரை ஆண்டுகள் மைசூர் தடா எனும் பெய் வழக்குகள் போன்ற எண்ணற்ற கொடுமைகளைச் செய்து வதைத்து வந்தது.

 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடந்த கொடுமைகளையும், மனித உரிமை மீறல்களையும், அரசியல் கட்சிகள் தன்னார்வ அமைப்புகள் போன்றவற்றின் மூலமாகத் தேசிய மனித உரிமை ஆணையத்திற்குப் புகார்களாகக் கொண்டு செல்லப்பட்டது. இதன் அடிப்படையில் சதாசிவ கமிட்டி ஆக்கிரமிக்கப்பட்டுப் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்து 6 அமர்வுகளாகப் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

 

இதில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் எஸ்.டி.எப் அதிகாரிகள் என சுமார் 300க்கும் அதிகமானோர் தங்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். மேலும் இக்கமிட்டியானது 192 பாதிக்கப்பட்ட சாட்சியங்களில் 89 நபர்களைத் தேர்வு செய்தது. இவர்களுக்கு 2000ம் ஆண்டு கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலின்போது வீரப்பனால் கோரிக்கை வைக்கப்பட்டு இரு மாநில அரசுகளால் தலா ரூபாய் 5 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. எனவே அந்த 10 கோடியில் இரு மாநில அரசுகளும் 2.80 கோடிகள் இடைக்கால இழப்பீடாகக் கடந்த 2007ஆம் ஆண்டு கொடுத்திருந்தது. 

 

இந்நிலையில் இடைக்கால இழப்பீடு கொடுத்தது 14 ஆண்டுகள் ஆகிய பின்பு தற்போது பாதிக்கப்பட்ட மக்களே ஒன்றுகூடி விடியல் மக்கள் கூட்டமைப்பு லக்கம்பட்டி என்ற பெயரில் அமைப்பாகி முருகேசன் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீதமுள்ள 7.20 கோடி பணத்தையும் முழு நிவாரணமாக வழங்கிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த மனு கடந்த 12.03.2021ல் நீதிபதி அப்துல்குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்குப் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. 

 

இந்நிலையில் தங்களுக்கு முழு நிவாரணம் வழங்கவும், தங்களின் குடும்ப வாரிசுகளுக்கு ஏதாவது ஒரு துறைகளில் தகுதி அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கிட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழக முதலமைச்சர் அலுவலகம், கர்நாடக முதலமைச்சர் அலுவலகம், தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு மனு அளித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக வீரப்பனின் மகள் அறிவிப்பு!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Veerappan daughter Vidya Rani announced as the candidate of Naam Tamilar Party!

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அனைத்துக் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து 'சீமானின் சின்னம் என்ன?' என அக்கட்சியினர் போஸ்டர் மூலம் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வந்தார். தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் வழக்கு விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முன்னதாகவே வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இன்று சென்னை பல்லாவரத்தில் நடைபெறும் கூட்டத்தில் புதிய சின்னம் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி உள்ளார்.

அதில், நாம் தமிழர் கட்சி சார்பாக கிருஷ்ணகிரி தொகுதி நாடாளுமன்ற வேட்பளராக வீரப்பனின் மகள் வித்யாராணி வீரப்பன் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இதற்கு முன்பு பாஜகவில் இருந்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு நினைவுத் தூண்! - திறந்து வைத்த ஆளும்கட்சி வேட்பாளர்!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Sandalwood smuggling in Andhra Pradesh is a memorial to Veerappan

ஆந்திர மாநிலம் – சித்தூர் மாவட்டம் – குப்பம் சட்டமன்றத் தொகுதியானது, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் சொந்தத் தொகுதியாகும். பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு 8வது முறையாக இத்தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில், சித்தூர் மாவட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர மேல்சபை உறுப்பினரும், குப்பம் சட்டமன்றத் தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளருமான பரத் போட்டியிடுகிறார். குப்பம் சட்டமன்றத் தொகுதியிலுள்ள சாந்திபுரம் அருகே சந்தனக் கடத்தல் வீரப்பனின் போட்டோவுடன் கூடிய நினைவுத் தூண் ஒன்றை சிலர் நிறுவியுள்ளனர்.

Sandalwood smuggling in Andhra Pradesh is a memorial to Veerappan

அந்தப் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பரத், வீரப்பன் நினைவுத்தூணைத் திறந்து வைத்து சிரித்தபடியே போட்டோவுக்கும் போஸ் கொடுத்துள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா காவல்துறையினருக்கு முன்பு சிம்ம சொப்பனமாக இருந்து, காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பனின் நினைவுத்தூணை ஆளும்கட்சியின் மேல்சபை உறுப்பினரான பரத்  திறந்து வைத்திருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது.