Skip to main content

சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வீராணம் ஏரி வறண்டது..! மாற்று ஏற்பாடு என்ன..?

Published on 12/04/2021 | Edited on 12/04/2021

 

Veeranam Lake, which supplies drinking water to Chennai, has dried up ..! What is the alternative arrangement ..?

 

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வந்த நிலையில் ஏரி வறண்டதால், வாலாஜா எரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்படுகிறது.

 

வீராணம் ஏரியில் இருந்து தொடர்ந்து சென்னைக்கு குடிநீருக்காக தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஏரியில் தூர் வாருதல், கரையைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளதால், ஏரிக்கு தண்ணீர் வரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ஏரியின் நீர் மட்டம் சரசரவென குறைந்தது. இதனால் சென்னைக்கு தண்ணீர் அனுப்புவது கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டது.

 

இதற்கு மாற்று ஏற்பாடாக, வடலூர் அருகே உள்ள வாலாஜா ஏரியில் இருந்து பரவனாற்றில் தண்ணீர் விட்டு, அதை ராட்சத மோட்டார்கள் மூலம் உறிஞ்சி வீராணம் குழாய் வழியாக சென்னைக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தற்போது பரவனாற்றில் இருந்து வினாடிக்கு 15 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

 

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர், வாலாஜா ஏரியில் தேக்கிவைக்கப்படுகிறது. வாலாஜா ஏரியின் முழு கொள்ளவு 5.5 அடியாகும், தற்பொழுது ஏரியில் 5.5 அடி தண்ணீர் உள்ளது. இந்த ஏரி சுமார் 1,600 ஏக்கராகும். மேலும் தண்ணீர் தேவை ஏற்பட்டால் வடலூரில் இருந்து பண்ருட்டி வரை போடப்பட்டுள்ள 30க்கும் மேற்பட்ட போர்வெல்லில் இருந்தும் தண்ணீர் எடுக்க மெட்ரோ வாட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே சென்னை மக்களின் குடிநீர் ஆதாரத்தைக் காக்கும் ஏரிகளாக கடலூர் மாவட்ட ஏரிகள் உள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.