Skip to main content

வர்தா புயலில் மாயமான மீனவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு -பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு

Published on 24/09/2018 | Edited on 24/09/2018
varta cyclone

 

 

வர்தா புயலில் மாயமான மீனவர்களின் குடும்பத்திற்கு தலா  4 லட்சம் ரூபாய்  இழப்பீட்டு கோரிய மனுவை 4 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வீசிய வர்தா புயலின் போது கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்கள் மாயமாகினர். இதில் இருவரது உடல் மட்டும் நாகப்பட்டினம் பகுதியில் கரை ஒதுங்கியது. உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து 1 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்ட நிலையில், பேரிடர் மேலாண்மை நிதியத்திலிருந்து  4 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என 2016 டிசம்பரில் அறிவிக்கப்பட்டது. 
 

ஆனால் இந்த இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை எனக் கூறி, சென்னையை சேர்ந்த பிரதீப் குமார் என்பவர் பொது நல மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், 4லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையை  உடனே வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
 

இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத்  அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சமீபத்தில் ஏற்பட்ட ஒக்கி புயலின் போது இழப்பீடு வழங்குவது குறித்து விதிகள் அடங்கிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் மனுதாரரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதனை பதிவு செய்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை நான்கு வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். மேலும், அதுதொடர்பான அறிக்கையை அக்டோபர் 24ஆம் தேதி தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.