Skip to main content

பட்டா பெயர் மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக மாட்டிய வி.ஏ.ஓ

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

VAO arrested taking bribe changing Patta name

 

கடலூர் மாவட்டம் தோப்பிருப்பு கிராமத்தை சேர்ந்த விவசாயியான அன்பழகன் என்பவர் தனது தந்தை பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில் தனது பெயர் மாறுதலுக்காக அவர் கொத்தட்டை கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதியை அணுகிய போது பார்த்தசாரதி அன்பழகனிடம் லஞ்சம் கொடுத்தால்தான் பெயர் மாறுதல் செய்யப்படும் எனவும், அதற்காக ரூ 10,000 பணம் வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார்.

 

பணம் கொடுக்க விரும்பாத அன்பழகன் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கடலூர் லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி தேவநாதன் தலைமையிலான போலீசார் நேற்று(26.8.2022) இரசாயனம் தடவிய ரூ 10,000 பணம் கொடுத்து அனுப்பினர். இதனை லஞ்சமாக பார்த்தசாரதியிடம் அன்பழகன் கொடுத்தபோது அங்கு பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பார்த்தசாரதியை பிடித்தனர். அதன்பிறகு அவரை கைது செய்து கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்த நிலையில் கடலூர் விஜயலட்சுமி நகரில் உள்ள அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

 

தொடர்ந்து பார்த்தசாரதியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் இதுபோன்ற பல்வேறு விஷயங்களுக்காக லஞ்சமாக பெற்ற பணத்தில் கடலூர் கூத்தப்பாக்கத்தில் ஒரு வீடு, புவனகிரி வட்டத்தில் 30 ஏக்கர் நிலம் வாங்கியது தெரியவந்தது. அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.

 

இதையடுத்து அவரை கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறைச்சாலையில் போலீசார் அடைத்தனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதி வீடு, நிலம் வாங்கியது தொடர்பாக மேல் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு புவனகிரி வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், சர்வேயர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரை கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்திற்கு வருமாறு அழைத்தனர்.

 

அதன்பேரில் நேற்று(26.8.2022) புவனகிரி வட்டாட்சியர் ரம்யா, மண்டல துணை வட்டாட்சியர் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர், சர்வேயர் ஆகியோர் கடலூர் லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் முன்பு ஆஜரானார்கள். அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதி தொடர்பான பல்வேறு விவரங்களை கேட்டு பெற்றனர். அத்துடன் முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.