Skip to main content

“அன்றே வள்ளுவர் ட்வீட் செய்தார்..” - கவனம் ஈர்க்கும் வள்ளுவர் காலண்டர் குறித்து ஸ்ரீ பிரகாஷ் பேட்டி

Published on 16/01/2022 | Edited on 16/01/2022

 

"Valluvar tweeted that day .." - Sri Prakash

 

உலகம் முழுக்க இலக்கியங்கள் இருக்கின்றபோதிலும், அனைத்திற்கும் தலைமையாகவும், உலக பொதுமறையாகவும் பார்க்கப்படுவது திருக்குறள். இந்த உலகில் மனிதனாக பிறந்த யாவரும் இத்திருக்குறளின் அறநெறிகளைக் கொண்டு தங்கள் வாழ்வினை நெறிப்படுத்த  முடியும். இத்திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் உருவம், அவரின் பிறப்பிடம் குறித்த விவாதம் இன்றளவும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பொதுமறையானான வள்ளுவனுக்கு காவிகள் பூசி ஒரிடத்தில் அடைக்கும் நிகழ்வுகளும் நடந்துகொண்டிருக்கிறது. அதேசமயம், உலகில் இன்னும் எந்த மொழிக்காரர்களின் நாவுக்கு வள்ளுவன் செல்லவில்லை என தேடி திருக்குறளை எடுத்துச் செல்லும் நிகழ்வுகளும் நடந்துகொண்டிருக்கிறது. 

 

"Valluvar tweeted that day .." - Sri Prakash

 

இந்நிலையில், பில்ரோத்  மருத்துவமனையின் உதவியுடன் தனது கலைப் படைப்பின் மூலம் வள்ளுவனை வெவ்வேறு பரிணாமங்களில் உலகிற்கு காட்சிப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார் பெஷ்வா கிரியேட்டிவ் நிறுவனத்தின், கிரியேட்டிவ் இயக்குநராகச் செயல்படும் ஸ்ரீ பிரகாஷ். கோபி ஓவியனின் கைவண்ணத்தில் பலவிதமாக வள்ளுவரின் உருவங்கள் வரையப்பட்டு, அதிலிருந்து 12 ஓவியங்கள் தேர்வுசெய்யப்பட்டு காலண்டருக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இக்காலண்டர் படங்கள் அண்மையில் ஆன்லைன் தளத்தில் கசிந்தது. 

 

இதுகுறித்து நாம் ஸ்ரீ பிரகாஷிடம் பேசினோம், “2016 -ல் தொடங்கப்பட்டது இம்முயற்சி. இதில் இன்னும் சில பணிகள் முடிக்கவேண்டியுள்ளது. இதனை பெரிய அளவில் வெளிக்கொண்டுவரவேண்டும் என எண்ணி இருந்தேன். ஆனால், இன்று இது பன்னாட்டு ஆன்லைன் நிறுவனங்களில் எனக்கே தெரியாமல் விற்பனைக்கு வந்திருப்பது வேதனை அளிக்கிறது. இதை யாரும் உபயோகப்படுத்தலாம். ஆனால், அதனை வியாபார ரீதியாகக் கொண்டு போகும்போதுதான் மன வேதனையாக உள்ளது. இன்று இந்த நவீன உலகத்தில் 170 வார்த்தைகளைக் கொண்டு ட்வீட் செய்கிறோம். ஆனால், அன்று அத்தனை ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே வள்ளுவர் ஏழு சொற்களைக் கொண்டு ட்வீட் செய்துள்ளார். நான் அவரின் குறள் ஒவ்வொன்றையும் ட்வீட் என்றுதான் சொல்லுவேன். வள்ளுவன் அனைவருக்கும் பொதுவானவர்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருவள்ளுவர் நாள் விழா‌‌ கொண்டாட்டம்!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Thiruvalluvar day celebration in Sivagangai!

சிவகங்கையில் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சிவகங்கை மாவட்டம் முதலாம் ஆண்டு திருவள்ளுவர் நாள் விழாவைக் கொண்டாடியது. கருத்தரங்கம், வாழ்த்தரங்கம், கவியரங்கம் என மூன்று அரங்கமாக இந்நிகழ்வு கொண்டாடப்பட்டது. நிகழ்வின் தொடக்கமாக உலகத்திருக்குறள் கூட்டமைப்பினர் திருவள்ளுவர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

விழாவிற்கு வந்தோரை மு.சகுபர் நிசா பேகம்  வரவேற்றார், தேசிய நல்லாசிரியர் செ. கண்ணப்பன் தலைமை வகித்தார், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சிவகங்கை மாவட்டத் தலைவர் சோ.சுந்தர மாணிக்கம், துணைத் தலைவர் மு.முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்குறளை வாழ்வியலாக கொண்டு திருக்குறள் பரப்பும் பெரும் பணியை செய்து வரும் கல்லலைச் சேர்ந்த திருக்குறள் பரப்புநர் சி.முத்தையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும் சிவகங்கை தொல்நடைக் குழு தலைவருமான நா. சுந்தரராஜன், சிவகங்கை அரிமா சங்கத் தலைவர் க.முத்துக்குமரன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் (ஓய்வு) இளங்கோவன், கலைமகள் ஓவியப்பள்ளி ஓவியர் நா.முத்துக்கிருஷ்ணன், சிவகங்கை மூத்த வழக்கறிஞர் மு. இராம் பிரபாகர், நல்லாசிரியர் பா.முத்துக்காமாட்சி, மருத்துவத்துறை கண்காணிப்பாளர் இரமேஷ் கண்ணன், ( jci )உலக இளையோர் கூட்டமைப்பு செயலர் ஹரிஹரசுதன் ஆகியோர் வாழ்த்துரைத்தனர். உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மண்டல பொறுப்பாளர் புலவர் மாமணி ஆறு. மெய்யாண்டவர், க.கீர்த்திவர்சினி, கா.நனி இளங்கதிர், ப.யோகவர்ஷினி, க.முத்துலட்சுமி ஆகியோர் குறளால் பாராட்டு செய்யப்பட்டனர்.

‘வள்ளுவத்தைப் பாடுவோம்’ எனும் பொதுத் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது, இக்கவியரங்கத்திற்கு புலவர் கா.காளிராசா தலைமையேற்று தலைமைக் கவிதை பாடி வழி நடத்தினார். ‘உடுக்கை இழந்தவன் கை போலே’ எனும் தலைப்பில் முனைவர் உஷா, ‘அன்பின் வழியது உயிர்நிலை’ எனும் தலைப்பில் கவிஞர் பீ. பி.எஸ் எட்வின், ‘அறிவு அற்றம் காக்கும் கருவி’ எனும் தலைப்பில் முனைவர் இரா.வனிதா, ‘எண்னென்ப ஏனை எழுத்தென்ப’ எனும்  தலைப்பில் ஆசிரியர் மாலா, ‘உறங்குவது போலும் சாக்காடு’ எனும் தலைப்பில் கவிஞர் துஷ்யந்த் சரவணராஜ், ‘ஈதல் இசைபட வாழ்தல்’ என்னும் தலைப்பில் கவிஞர் சரண்யா செந்தில், ‘யான் நோக்கும் காலை நிலன்நோக்கும்’ என்ற தலைப்பில் கவிஞர் அகமது திப்பு சுல்தான், ‘முயற்சி திருவினையாக்கும்’ என்ற தலைப்பில் கவிஞர் பிரீத்தி அங்கயற் கண்ணி ஆகியோர்கவிதை பாடினர்.

ஆசிரியர் ந. இந்திரா காந்தி, செல்வி கா.நவ்வி இளங்கொடி  நிகழ்வை தொகுத்து வழங்கினர். அரிமா முத்துப்பாண்டியன், லோபமித்ரா, மகேந்திரன்,அந்தோணி பிரான்சிஸ் ஜெயப்பிரியா ஆகியோர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டனர். தவழும் மாற்றுத்திறனாளிகள் தாய் இல்ல ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ், இரமண விகாஸ் பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன், பாரதி இசைக் கல்விக் கழக யுவராஜ், தமிழாசிரியர் அயோத்தி கண்ணன் போன்றோர் நிகழ்வில் கலந்து கொண்டனர், இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை புலவர் கா. காளிராசா செய்திருந்தார்,இந்நிகழ்வின் இறுதியில் ஆசிரியர் வே.மாரியப்பன் நன்றியுரைத்தார்.

Next Story

'மும்மொழி கொள்கையே திணிப்புதான்'-கவிஞர் வைரமுத்து கருத்து

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
'Three-language policy is an imposition'-poet Vairamuthu interviewed

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்பட்டும், நாளை காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே, மாட்டுப் பொங்கல் தினமான இன்று திருவள்ளுவர் தினமும் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த விழாவையொட்டி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 'இந்தி மொழியை திணித்து தமிழர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது' என ஒன்றிய அரசை வலியுறுத்துவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னை பெசன்ட் நகர் மாநகராட்சி பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கவிஞர் வைரமுத்து, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''திருவள்ளுவர் தமிழர் பண்பாட்டின் வரலாற்று அடையாளம். மும்மொழி கொள்கை என்பதே திணிப்புதான் என தமிழர்கள் கருதுகின்றனர். அதனாலேயே இந்தி மொழி திணிப்பை வேண்டாம் என்று கூறுகிறோம். மும்மொழி கொள்கை என்பது திணிப்பு என்பது தமிழர்களின் தீர்க்கமான எண்ணம். இந்தி மொழி மீது எங்களுக்கு என்ன வெறுப்பா. இல்லை. இந்தி மொழி கூடாது என்று நாங்கள் கொடிபிடிக்கிறோம் என்றால் இந்தி மொழியின் திணிப்பு கூடாது என்று நாங்கள் உறுதிபட சொல்கிறோம். இந்தி மொழியின் திணிப்பு எதிர்ப்பதைத்தான் தமிழர்கள் காலம் காலமாக கடைபிடித்து வருகிறார்கள்'' என்றார்.