Skip to main content

வைகை எக்ஸ்பிரஸ் ரயில் வேகம் குறைப்பு? - பயணிகள் கடும் கண்டனம்

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

vaikai Express speed reduction Passengers strongly condemned

 

வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையிலிருந்து காலை 07.10 மணிக்கு புறப்பட்டு 07.15 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு பிற்பகல் 02.25 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும். அதேபோன்று சென்னை எழும்பூரில் இருந்து நண்பகல் 01.50 மணிக்கு புறப்பட்டு சுமார் 07.25 மணி நேரப் பயணத்தைக் கடந்து இரவு 09.15 மணிக்கு மதுரையைச் சென்றடையும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் நாளை முதல் மதுரை - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்பட்டு வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் : 12636) காலை 7.10 மணிக்குப் பதிலாக 6.40 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு பிற்பகல் 2:10 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். அதே சமயம் சென்னை எழும்பூர் - மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் : 12635) வழக்கம் போல பிற்பகல் 1.50 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்குப் பதிலாக 9.30 மணிக்கு மதுரை சென்றடையும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு ரயில்களின் கால அட்டவணையும் மாற்றப்பட்டுள்ளன.

 

இந்த சூழலில் மதுரையிலிருந்து புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் அரை மணி நேரம் முன்னதாகவே புறப்பட்டாலும் பிற்பகல் 02.10 மணிக்கு தான் சென்னை எழும்பூரை சென்றடைகிறது. எதிர்த் திசையிலும் நேர மாற்றத்தின் காரணமாக 15 நிமிடங்கள் தாமதமாக மதுரையைச் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரயில் பயணிகள் பலரும் கடும் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் சென்னை - நெல்லை இடையே கடந்த 24 ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயிலின் மக்கள் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தைக் குறைக்கும் முயற்சி நடைபெறுவதாக ரயில் பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வைகை எக்ஸ்பிரஸ் ரயில் தனது 46வது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘சென்னை புறநகர் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்’ - தெற்கு ரயில்வே

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Chennai suburban trains operating as usual Southern Railway

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

அதே சமயம் மிக்ஜாம் புயலால் ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி சென்னை புறநகர் ரயில்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் நாளை (07.12.2023) முதல் சென்னை புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம்போல் உரிய அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையேயான புறநகர் ரயில்கள் சேவை நாளை முதல் வழக்கம்போல் இயங்கும். மேலும் திருவொற்றியூர் - சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டிக்கு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை என சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்பட உள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Next Story

சென்னை மெட்ரோ, புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம்

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Change in Chennai Metro, Suburban Train Services

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (04.12.2023) ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்கள் நாளை (04.12.2023) ஞாயிற்றுக்கிழமை பின்பற்றப்படும் அட்டவணைப்படி இயங்கும் எனத் தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை மெட்ரோ ரயில்கள் நாளை (04.12.2023) ஒரு நாள் மட்டும் சனிக்கிழமை நேர அட்டவணையின் படி இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

 

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “மிக்ஜாம் புயல் காரணமாக நாளை 04.12.2023 (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் சனிக்கிழமை நேர அட்டவணையின்படி மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். அதன்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.