Skip to main content

தடுப்பூசி சிறப்பு முகாம்... ‘ஒருநாள் ஆர்.டீ.ஓக்கள்’ செய்த அலப்பறை-கடுப்பான பொதுமக்கள்!

Published on 12/09/2021 | Edited on 12/09/2021

 

Vaccine special camp ... ‘One day RDOs’

 

தமிழ்நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் கலந்துக்கொண்டு அனைவரும் தடுப்பூசி போடவேண்டும், பொதுமக்களுக்கு பெரியளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், தடுப்பூசி போடாதவர்களை போட வைக்க வேண்டும் என அனைத்து துறைகளின் சார்பில் ஒவ்வொரு துறைக்கும் பணிகள் பிரித்து ஒதுக்கப்பட்டது.

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1.5 லட்சம் தடுப்பூசிகள் போட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதற்காக அனைத்து துறைகளும் களத்தில் இறக்கிவிடப்பட்டன. இதில் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளுக்கும் பணிகள் ஒதுக்கப்பட்டது. சிறப்பு முகாம் நடைபெறும் நாளன்று கார், ஆட்டோ, பேருந்து என இலகுரக, கனரக வாகனங்களின் ஓட்டுநர்கள் பலர் தடுப்பூசி போடாமல் உள்ளனர். அவர்கள் தடுப்பூசி போட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் கூறியிருந்தார்.

 

Vaccine special camp ... ‘One day RDOs’

 

திருவண்ணாமலை நகரத்துக்குள் வரும் 9 சாலைகளில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை சார்ந்த அலுவலர்கள் பிரித்து அனுப்பி வாகனங்களை நிறுத்தி ஓட்டுநர்களிடம் தடுப்பூசி போடப்பட்டுவிட்டதா என விசாரிக்க வேண்டும், போடவில்லையெனில் அவர்களை அருகில் உள்ள சிறப்பு முகாமிற்கு அனுப்பி தடுப்பூசி போட வைக்க வேண்டும் எனச் சொல்லி அனுப்பினர். திருவண்ணாமலை டூ அவலூர்பேட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாமிற்கு அருகில் வாகனங்களை நிறுத்தி தடுப்பூசி விழிப்புணர்வுக்கு அனுப்பப்பட்ட அலுவலர் தனக்கு உதவியாக ட்ரைவிங் ஸ்கூல் ஓனர்கள், பணியாளர்களை வரவழைத்துள்ளார். எட்டுக்கும் மேற்பட்ட டிரைவிங் ஸ்கூல் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டது. அந்த அலுவலர் காரில் ஜம்மென்று உட்கார்ந்து கொண்டுள்ளார்.

 

டிரைவிங் ஸ்கூல் ஓனர்கள், பணியாளர்கள் நகருக்குள் வரும் வாகனங்களை நிறுத்தி, ஏன் மாஸ்க் ஒழுங்கா போடல? தடுப்பூசி ஏன் போடல? போட்டியா எங்க சர்டிபிகேட் காட்டு என ஒருமையில் மிரட்டியுள்ளனர். எதிர்த்து கேள்வி எழுப்பியவர்களின் வண்டி சாவிகளை பூட்டி கையில் எடுத்துக்கொண்டு போய் அய்யாவ பாரு என மரியாதை இல்லாமல் பேசியுள்ளனர். தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர் மாஸ்க் சரியாக போடவில்லையென வண்டியை ஆப் பண்ணுடா, உன் முதலாளியை போன் செய்யச் சொல்லு, அப்பறம்தான் பஸ்ச விடுவோம் என மிரட்டத்துவங்கினர். அரசியல் பிரமுகர் ஒருவரின் இருசக்கர வாகனத்தை வெளியூரை சேர்ந்த டிரைவிங் ஸ்கூல் பணியாளர் நிறுத்தி வம்பாக கேள்வி எழுப்ப மற்றொரு டிரைவிங் ஸ்கூல் ஓனர் பார்த்துவிட்டு நீங்க போங்க சார் அனுப்பியுள்ளார். தினசரி பத்திரிகைத்துறை போட்டோகிராபர் ஒருவரிடமும் தகராறு செய்து அவரின் இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்துக் கொண்டுள்ளனர்.

 

Vaccine special camp ... ‘One day RDOs’

 

நல்லா டிப்டாப்பாக இருந்ததால் அவுங்க அதிகாரிகள் என்றே மக்கள் அனைவரும் நினைச்சாங்க. வண்டியை நிறுத்தி ஒருமையில பேசனவனுங்க டிரைவிங் ஸ்கூல் ஆளுங்கன்னு தெரிஞ்சிருந்தா விவகாரம் வேறமாதிரியாகியிருக்கும். அதிகாரிகள் நிறுத்தி கேள்வி கேட்டு இருந்தால் கூட பரவாயில்லை. சம்மந்தம்மேயில்லாத டிரைவிங் ஸ்கூல் நடத்தறவங்க வாகனங்களை நிறுத்தி அவமரியாதையா பேசனதைத்தான் ஏத்துக்க முடியலை. ஏய், நீ ஏன் சரியா மாஸ்க் போடல? போய் ஓரமா நில்லுன்னு மக்கள்கிட்ட அதிகாரம் செய்து ஏதோ இவுங்க ஆர்.டீ.ஓ, இன்ஸ்பெக்டர் மாதிரி நடந்துக்கிட்டாங்க. குடும்பத்தோட வந்தவர்களையும் மிரட்டினாங்க. இவுங்களுக்கு யாருங்க இந்த அதிகாரத்தை தந்தது? யார் வேண்டுமானாலும் பொதுமக்களை மிரட்டலாமா? என நம்மிடம் குமுறினார்கள் பாதிக்கப்பட்ட சிலர்.

 

 

நமக்கு தகவல் வந்ததும் நாம் நேரடியாக சென்று பார்த்தபோது, டிரைவிங் ஸ்கூல் ஓனர்கள், பணியாளர்கள் அதிகாரிகள் போலவே நடந்துக்கொண்டு மக்களிடம் ஒருமையில் பேசிக்கொண்டும், மிரட்டிக்கொண்டும் இருந்தது அதிர்ச்சியாக இருந்தது. நாம் இதுகுறித்து திருவண்ணாமலை ஆர்.டீ.ஓவை தொடர்புக்கொண்டு பேசியதும், ஆட்கள் பற்றாக்குறை, அதனால் சிலரை துணைக்கு வைத்துக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தச்சொன்னேன். இப்படி நடப்பார்கள் எனத்தெரியாது, வேறு எங்கும் இப்படி பிரச்சனையாகவில்லை. இங்கு மக்களிடம் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது, நான் உடனடியாக விசாரிக்கிறேன் என்றார். சிறிது நேரத்தில் அங்கிருந்தவர்கள் அந்த இடத்தில் இருந்து காலி செய்துக்கொண்டு சென்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

“பிசினஸ்மேன் டூ அரசியல்வாதி; கலைஞர் சொன்ன அந்த வார்த்தை...” - யார் இந்த அண்ணாதுரை?

Published on 08/04/2024 | Edited on 09/04/2024
Activities of Tiruvannamalai DMK candidate Annadurai

நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாட்கள் குறைவாக இருப்பதால், முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தமிழகத்தின் 39 தொகுதியிலும் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஆன்மீக திருத்தலங்கள் நிறைந்த திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் மீண்டும் திமுக சார்பில் சி.என். அண்ணாதுரை இரண்டாவது முறையாக களம் இறக்கப்பட்டுள்ளார். முன்னதாக திமுகவைச் சேர்ந்த எ.வ.வேலுவின் இளைய மகன் மருத்துவரணி மாநில துணைத் தலைவர் மருத்துவர் கம்பன், பொறியாளர் அணியின் மாநிலச் செயலாளர் கு.கருணாநிதிக்கு தலைமை சீட் வழங்கும் என அரசியல் வட்டாரம் எதிர்பார்த்த நிலையில், மீண்டும் சி.என். அண்ணாதுரை மீது தலைமை நம்பிக்கை வைத்துள்ளது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட சி.என். அண்ணாதுரை அந்த தேர்தலில் வெற்றிப் பெற்றார். அதனைத் தொடர்ந்து, தொகுதி மக்களின் பிரச்சனைகளுக்கு மக்களவையில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். ஆனால், மத்தியில் ஆளும் அரசு எதிர்க்கட்சி பாஜகவாக இருப்பதால், அவரால் தொகுதி திட்டப்பணிகளை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை என குற்றம் சாற்றுகின்றனர் எம்பியின் ஆதரவாளர்கள்.

51 வயதான சி.என். அண்ணாதுரை, திருவண்ணாமலை மாவட்டம், தேவனாம்பட்டு காட்டுப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். சி.என். அண்ணாதுரையின் தாத்தா சின்னசாமி பேரறிஞர் அண்ணா மீது தீவிரப் பற்றுக்கொண்டவர். அவரைத் தொடர்ந்த சி.என். அண்ணாதுரையின் அப்பா நடராஜனும் திமுக கட்சியில் அப்போதே ஒன்றியச் செயலாளராக கழக பணியில்  ஈடுபட்டவர். இப்படி இரண்டு தலைமுறையாக பேரறிஞர் அண்ணா மீது தீவிரப் பற்றுக்கொண்ட குடும்பம் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த மகனுக்கும்  பேரறிஞர் அண்ணாவின் பெயரையே சூட்டியது. சி.என். அண்ணாதுரை, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.காம் முடித்தவர். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் கட்டுமானத் துறையில் நுழைந்த அண்ணாதுரை முழு நேர பிசினஸ்மேனாக மாறினார். இதனிடையே,  மூன்றாவது தலைமுறையாக திராவிட இயக்கத்தில் இருந்த அண்ணாதுரை கிளைச் செயலாளர்,  துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் என படிப்படியாக திமுக கட்சியில் வளர்ந்தவர்.  

தொடர்ந்து, பாரம்பரியமாக திமுக கட்சியில் தீவிரமாக கழகப் பணிகளை செய்து வந்த சி.என். அண்ணாதுரையை திமுக அமைச்சர் எ.வ.வேலு இளம் வயதிலேயே அடையாளம் கண்டார். அதனைத் தொடர்ந்து, எ.வ.வேலுவின் அரவணைப்பில் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வந்த சி.என். அண்ணாதுரைக்கு திமுக கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட முதல் முறையாக வாய்ப்பு வழங்கியது. ஆனால், அந்த முறை தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். முன்னதாக மறைந்த திமுக தலைவர் கலைஞர் சி.என். அண்ணாதுரைக்கு முதல் முறை சீட் வழங்கிய போது, ''என் அண்ணன் பெயரைக்கொண்ட இந்த சி.என்.அண்ணாதுரைக்கே சீட்..’' என குறிப்பிட்டு வழங்கியதாக அவரது ஆதரவாளர்கள் நெகிழ்ச்சியுடன்  கூறுகின்றனர். இதையடுத்து, மீண்டும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அவரது அரசியல் குரு எ.வ.வேலுவின் மூலம் சீட் சி.என். அண்ணாதுரைக்கு கிடைத்தது. ஆனால், இந்த முறை  சி.என். அண்ணாதுரை வாகை சூடினார். 

அதனைத் தொடர்ந்து, நாடளுமன்றம் அவைக்குச் சென்ற சி.என். அண்ணாதுரை தொடர்ந்து தொகுதி மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வந்தார். அதன் மூலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களை ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின்கீழ் மேம்படுத்த நிதி ஒதுக்கச் செய்தார். திருவண்ணாமலை - திண்டிவனம் ரயில் பாதைத் திட்டத்துக்காகப் போராடி, 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். ஆனால், எம்பி திட்டம் தொகுதிக்கு கொண்டு வந்தும் நிதி மத்திய அரசு ரிலீஸ் செய்யவில்லை என குற்றம் சாற்றுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.  அதுமட்டுமல்லாமல் ஜவ்வாதுமலை, புதூர்நாடு மலைக் கிராமங்களில் 33 டவர்களை நிறுவுவதற்கான பணிகளை தனது தொகுதியின் வளர்ச்சிக்கு மத்திய அரசிடம் சி.என். அண்ணாதுரை அழுத்தம் கொடுத்து செய்து கொடுத்துள்ளார். மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காத காரணத்தால் தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு காத்திருக்காமல் சி.என். அண்ணாதுரை தனது சொந்த செலவில் பர்வதமலைக்கு 40 சோலார் விளக்குகளை அமைத்துள்ளார். 

கடந்த முறை மத்தியில் எதிர்க்கட்சியாக பாஜக இருந்த காரணத்தால் திருவண்ணாமலை தொகுதி வளர்ச்சி திட்டப்பணிகளை முழுமையாக செய்ய முடியவில்லை என்றும், வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வாய்ப்பு  அளித்தால் மேலும், சி.என். அண்ணாதுரை சிறப்பாக செயல்படுவார் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மீண்டும் வேட்பாளராக சி.என். அண்ணாதுரை அறிவிக்கப்பட்டதில் இருந்து அவரது ஆதரவாளர்கள் இந்த முறையும் அவரை வெற்றி பெற வைக்க தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.