தனியார் விடுதிகள், குழந்தைகள், மகளிர் காப்பகங்கள் அரசு இணையதள போர்ட்டலில் ஆக., 30ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாத விடுதி உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனச் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எச்சரித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகள், தனியார் மகளிர் விடுதி மற்றும் இல்லம் ஆகியவை தமிழ்நாடு விடுதிகள், பணிபுரியும் மகளிர் விடுதி மற்றும் குழந்தைகள் காப்பகங்கள் ஒழுங்குமுறை சட்டம் 2014ன் கீழ் கட்டாயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்யப்படாத விடுதிகள், https://tnswp.com என்ற இணையதள போர்ட்டல் மூலம் அறக்கட்டளை பதிவு பத்திரம், சொந்த கட்டடம் அல்லது வாடகை ஒப்பந்தப் பத்திரம், கட்டட வரைபடம், தீயணைப்புத்துறையின் தடையின்மைச் சான்று, சுகாதாரச் சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும்.
இந்த விவரங்களை, ஆகஸ்ட் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதள போர்ட்டல் மூலம் பதிவு செய்யப்பட வேண்டும். முறையாகப் பதிவு செய்யப்படாத தனியார் விடுதி, இல்ல நிர்வாகிகள் மீது காவல்துறை மூலம் வழக்குப்பதிவு செய்து, அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எச்சரித்துள்ளார்.