Skip to main content

அனுமதி இல்லாத பார்.. வழிப்பறியில் இறங்கும் இளைஞர்கள்.. நடவடிக்கை எடுக்குமா போலீஸ்?

Published on 10/06/2023 | Edited on 10/06/2023

 

Unlicensed bars.. Youths who go on the streets.. Will the police take action?

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் 140க்கு 80 டாஸ்மாக் கடைகளில் பார் அனுமதி இல்லை. ஆனால், தடையின்றி பார் நடப்பதுடன் இரவு பகலாக மது விற்பனையும் நடக்கிறது. இந்த அனுமதிக்கப்படாத பார்களிலும் அரசுக்கு வரவேண்டிய தொகையை விட 2 மடங்கு கூடுதல் கட்டணத்தை யாரோ வசூல் செய்து செல்கிறார்கள். அதனால் எந்த அதிகாரியும் கண்டுகொள்வதில்லை. இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் அதிகரித்து வருகிறது.

 

சில நாட்களுக்கு முன்பு ஆலங்குடி சப்-டிவிசன் வடகாடு காவல் எல்லையில் உள்ள வானக்கண்காடு டாஸ்மாக் கடையில் அனுமதி இல்லாத பாரில் காலை நேர மது விற்பனையில் ஈடுபட்ட பரிமளம் என்பவரை போலீசார் கைது செய்தனர். அப்போது அந்த பாரின் உரிமையாளர் மதியழகன் காவலரை தனது காலணியால் தாக்க முயன்றார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அதன் பிறகு அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த வடகாடு காவல் நிலையம், மதியழகனை இன்னும் கைது செய்யவில்லை. 

 

இதே போல அறந்தாங்கி அருகே துரையரசபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் அனுமதி இல்லாத பாரில் மது அருந்தும் சிலர், அந்த சாலையின் வழியாக செல்வோரிடம் வம்பிழுத்து அவர்களை தாக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன. நேற்று இரவு பஞ்சாத்தி ஆனந்த் என்பவர் தன்னிடம் வேலை செய்தவர்களுக்கு சம்பளம் கொடுக்க அந்தச் சாலை வழியாக சென்றுள்ளார். அப்போது அந்த அனுமதி பெறாத பாரில் மது அருந்திவிட்டு வெளியே வந்த சிலர், ஆனந்தை தாக்கி அவரிடம் இருந்த பணத்தை வழிப்பறி செய்துள்ளனர். இதனால், அந்தக் கிராம மக்கள் திரண்டு சாலை மறியல் செய்துள்ளனர்.

 

சாலை மறியலில் இருந்த கிராம மக்கள் கூறும் போது, “அனுமதி பெறாத பாரில் எந்த நேரமும் மது விற்பனை நடக்கிறது. இதனால் அடிக்கடி சட்ட ஒழுங்கு பிரச்சனை நடந்தாலும் போலீசார் கண்டுகொள்வதில்லை. அதன் விளைவு தான் இன்று ஆனந்த் தாக்கப்பட்டது. சாலை மறியலுக்கு பிறகு வந்த போலீசார் தாக்கியவர்களை கைது செய்யாமல் எங்களிடம் வந்து சமாதானம் பேசுகிறார்கள். இந்தப் பகுதியில் உள்ள அரசு நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையும் அதிகரித்துள்ளது. இதனை போலீசார் தெரிந்தும் தெரியாதது போல உள்ளனர். இதனால் பெரிய விபரீதங்கள் ஏற்படும் முன்பே நடவடிக்கை எடுத்தால் நல்லது” என்றனர். ஆனந்தை தாக்கியவர்களை கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்த பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“விதிமீறலில் ஈடுபட்ட டாஸ்மாக் பார்” - குரல் கொடுத்த குடிமகன்!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Tasmac Bar Irregular  Citizen Speaks Out

டாஸ்மாக் பாரில் மது அருந்தியபடியே நம்மைத் தொடர்புகொண்ட ஒருவர், “அண்ணே.. போதையெல்லாம் இறங்கிப்போச்சு..” என்று பேசினார். ‘கலப்படச் சரக்கா? என்ன விஷயம்?’ என்று கேட்டோம். “அதெல்லாம் இல்ல. டாஸ்மாக்ல 21 வயசுக்கு குறைவா உள்ளவங்களுக்கு சரக்கு விற்கக் கூடாதுன்னு சட்டம் சொல்லுது. ஆனா இந்த விருதுநகர் பார்ல (கடை எண் 11881) டவுசர் போட்ட சின்னப் பையனை வேலைக்கு வச்சிருக்காங்க. சிறுவன் தான் டேபிள் டேபிளா போயி பாட்டில வச்சிக்கிட்டிருக்கான். அவன் சின்னப் பையன்ங்கிறதுனால சரக்கடிக்க வந்தவங்க ஆளாளுக்கு அவனை விரட்டி வேலை வாங்குறாங்க. கண்டபடி திட்டுறாங்க.

பாக்குறதுக்கு பரிதாபமா இருக்கு. குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்க சட்டம் இருக்கு. டாஸ்மாக் சட்டம் வேற இருக்கு. ஆனா பாருங்க சட்டமீறலா இங்கே அநியாயம் நடக்குது. மனசு பொறுக்காமத்தான் ஒருத்தர்கிட்ட நக்கீரன் நம்பரை வாங்கி உங்ககிட்ட பேசுறேன். நான் ஒரு குடிமகன்தான். ஆனாலும் எனக்கும் மனசாட்சி இருக்குல்ல. அந்தப் பையனோட எதிர்காலத்த நெனச்சா ரொம்ப வேதனையா இருக்கு. உங்க வாட்ஸ்-ஆப் நம்பருக்கு போட்டோ எடுத்து அனுப்பிருக்கேன் சார்.” என்று நா தழுதழுக்கப் பேசினார்.

Tasmac Bar Irregular  Citizen Speaks Out

மது அருந்தினாலும் ஒரு பொறுப்புள்ள இந்தியக் குடிமகனாக நடந்துகொண்ட அந்த நபர், நம்மிடம் தன் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. விருதுநகர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரவிச்சந்திரனை தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னோம். “உடனே அங்கே போய் பார்த்து விசாரிச்சு நடவடிக்கை எடுக்கிறேன்.” என்று உறுதியளித்தார். 

Next Story

பேருந்து நிலையத்தில் மது கடத்தல்; மூன்று பெண்கள் கைது

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Liquor smuggling at bus station; Three women were arrested

மதுபான பாட்டில்களை கடத்திய பெண்கள் 3 பேர் கைது செய்யப்பட்டது நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் மூன்று பெண்கள் சந்தேகத்திற்கிடமாக மூன்று பைகளுடன் நின்றுகொண்டிருந்தனர். அப்போது  அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசாரை பார்த்த அப்பெண்கள் அவசர அவசரமாக ஆட்டோ ஒன்றில் ஏறி தப்பிக்க முயன்றனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் மூன்று பேரையும் பிடித்து அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்ததில் அந்த பைகளில் மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக மூன்று பேரையும் கைது செய்த போலீசார் முழுமையாக சோதனை செய்ததில் 300க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களும், சாராயமும் இருந்தது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பெண்களையும் கைது செய்ததோடு, இந்த மதுபாட்டில் கடத்தல் தொடர்பாக அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகையில் மூன்று பெண்கள் பேருந்து நிலையம் வழியாக மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.