Skip to main content

மாநிலங்கள் மீது பொருளாதார நெருக்கடியை சுமத்துகிறது ஒன்றிய அரசு! மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 25/05/2022 | Edited on 25/05/2022

 

UNION GOVERNMENT ECONOMIC CRISIS CHIEF MINISTER MKSTALIN

 

மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய நிதி வருவாயை ஒன்றிய அரசு சுரண்டி தின்றுவிட்டு, பொருளாதார நெருக்கடியை சுமத்துகிறது என்று ஒன்றிய அரசு மீது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

 

தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், சேலம் மாவட்டம், ஆத்தூரில் செவ்வாய்க்கிழமை (மே 24) நடந்தது. இக்கூட்டத்தில் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

 

சேலத்தைச் சேர்ந்த ஒருவர்தான் நான்கு ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்தார். தேர்தலுக்கு முன்னதாக எடப்பாடி தொகுதிக்கும் சென்று கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டேன். அந்த தொகுதியில் வேலை கேட்டு 10000 பேர் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த வேலையும் தரப்படவில்லை. 

அனைத்து விண்ணப்பங்களையும் கட்டு கட்டாக பிரிண்ட் எடுத்துச்சென்று மக்களிடம் காட்டினேன். அத்தனை பேரின் வேலைவாய்ப்புக்காக ஒரு திட்டம் கூட தீட்டாதவர்தான் அன்றைக்கு இருந்த முதல்வர் பழனிசாமி. முதல்வர் தொகுதியாச்சே... பெரிய அளவில் புகார்கள் இருக்காது என்று நினைத்தேன். இரண்டு மணி நேரம் என்னிடத்தில் புகார்களைச் சொன்னார்கள். போட்ட ரோட்டையே போட்டுக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். 

 

எடப்பாடியில் ஜவுளி பூங்கா, நெருஞ்சிப்பேட்டை காவிரி ஆற்றின் குறுக்கே பாலம், கொங்கணாபுரத்தில் தொழில் பூங்கா, மேட்டூர் உபரிநீர் பயன்பாடு, எடப்பாடி அரசு மருத்துவமனை மேம்பாடு, கொங்கணாபுரம் கூட்டுறவு வங்கி விவகாரம், மின் மயானங்கள், தேங்காய், மா, பருத்தி, மரவள்ளிக்கிழங்கு  ஆகியவற்றுக்கு ஆதார விலை, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், நிலக்கடலை உழவர்களுக்கு தனி கூட்டுறவு சங்கம் ஆகிய கோரிக்கைகளில் ஒன்று கூட தன் சொந்த தொகுதியில் பழனிசாமி நிறைவேற்றவில்லை.  

 

ஆனால், இன்றைக்கு தினமும் தி.மு.க. ஆட்சியை குறை சொல்லி அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார். தன் ஆட்சிக் காலத்தில் எதையாவது இந்த மாவட்டத்திற்கு செய்திருக்கிறாரா என்பதுதான் என் கேள்வி. பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை, தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு, கொடநாடு கொலை கொள்ளை ஆகியவைதான் பழனிசாமி ஆட்சியின் வேதனையான சாதனைகள். 

 

தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சியில், பத்தாண்டுகள் செய்யக்கூடிய சாதனைகளை இந்த ஓராண்டில் செய்திருக்கிறோம் என்பதை நெ-ஞ்சை நிமிர்த்தி கூறுவேன். சேலம் மாவட்டத்தில் செய்துள்ள சாதனைகளை சொல்வதற்கே நேரம் போதாது. முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் 23,965 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

 

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்குக் கீழ் நகைக்கடன் பெற்றவர்களில் 1,45,000 பேரில் 438 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 6 கோடி முறை பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டுள்ளனர். 7.01 லட்சம் பேர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர். 10.19 லட்சம் குடும்பத்தினர் கொரோனா நிவாரணம் பெற்றுள்ளனர். 

 

கடந்த டிச. 11- ஆம் தேதி சேலத்தில் 30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அன்றைய விழாவில், மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டேன். அதாவது, சேலத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா, கொலுசு உற்பத்திக்காக 28 கோடியில் பன்மாடி உற்பத்தி மையம் அமைப்பு, இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் கருப்பூரில் டைட்டல் பூங்கா அமைக்கப்படும் என்று கூறினேன். 

 

இந்த மூன்று திட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு நடத்தியுள்ளனர். இவை மூன்றுமே சேலத்திற்கு மிக மிக முக்கியமான நீண்ட கால கோரிக்கைகள். இப்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் திமுக அரசு ஏராளமான திட்டங்களை செய்து உள்ளது. 

 

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் பெட்ரோல் விலையை குறைப்போம் என்றோம். அது முடியுமா? சாத்தியமா? என்று பல பேர் கேட்டனர். விமர்சனம் கூட செய்தனர். ஆட்சி பொறுப்பேற்ற உடன் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்த அரசுதான் நம்முடைய திமுக அரசு. 

 

இப்படி விலையை நாம் குறைத்து ஓராண்டு ஆகிவிட்டது. இரண்டு நாள்களுக்கு முன்பு ஒன்றிய அரசு இப்போதுதான் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டதால் தமிழக அரசுக்கு 1160 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை வருவாய் இழப்பு என்று நிர்வாக ரீதியாகச் சொன்னாலும், உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் 1,160 கோடி ரூபாய் சலுகை மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. 

 

தற்போது ஒன்றிய அரசு, கலால் வரியை குறைத்துள்ளது. இதன்மூலமாக பெட்ரோல் 9.50 ரூபாயும், டீசல் விலை 7 ரூபாயும் குறைகிறது. இதில் ஒன்றிய வரி குறைப்பு 8 மற்றும் 6 ரூபாய். மாநில அரசின் வரி குறைப்பு 1.50 மற்றும் ஒரு ரூபாய் ஆகும். ஒன்றிய வரி குறைக்கப்படும்போது மாநில வரியும் தானாக குறையும். எனவே ஒன்றிய அரசு மட்டுமே வரியைக் குறைத்ததாக சொல்வது தவறு. 2014- ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபோது அன்றைக்கு இருந்த பெட்ரோல் விலை என்ன? இப்போதுள்ள விலை என்ன? என்பதை அவர்கள் விளக்க வேண்டும். 

 

2014 மே மாதம் பெட்ரோல் மீதான ஒன்றிய வரியானது லிட்டருக்கு 9.48 ரூபாயாக இருந்தது. 2022 மே மாதம் 27.90 ரூபாயாக உள்ளது. இதில் 8 ரூபாய் குறைத்துள்ளனர். அப்படி பார்த்தால் 19.90 ரூபாய் ஒன்றிய வரி உயர்த்தியுள்ளனர். ஏற்கனவே அதிகமாக உயர்த்தியதில் இருந்து குறைவாக குறைத்துள்ளனர். பல மடங்கு விலை ஏற்றிவிட்டு சிறிய அளவில் விலை குறைத்துள்ளனர். 

 

ஐந்து மாநிலத்தில் தேர்தல் நடந்ததால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தாமல் இருந்தனர். தேர்தல் முடிந்த பிறகு, கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் விலையை 10 ரூபாய் வரை உயர்த்தி உள்ளனர். அதில் இருந்து தற்போது 9.50 ரூபாய் குறைத்துள்ளனர். மாநிலங்களுடைய அனைத்து நிதி வருவாயையும் சுரண்டி தின்றுவிட்டு, ஒரு விதமான பொருளாதார நெருக்கடியை அனைத்து மாநில அரசுகளின் மீதும் ஒன்றிய பாஜக அரசு சுமத்துகிறது.  

 

மக்களோடு மக்களாக இருந்து, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு இருக்கிறது. கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர், கழிவுநீர் கால்வாய்கள், சாலை வசதிகள், மின்சாரம், சத்துணவு, ஊட்டச்சத்து என அனைத்தையும் மாநில அரசிடம்தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

 

இவை அனைத்தையும் செய்து தர வேண்டிய கடமை மாநில அரசுக்கு மட்டுமே இருக்கிறது. அத்தகைய மாநில அரசுகளை மக்களுக்கு சேவையாற்ற விடாமல் தடுப்பதற்கு, நிதி உரிமைகள் அனைத்தையும் ஒன்றிய அரசு பறிக்கிறது. 

 

ஒன்றிய அரசிடம் இருந்து நமக்கு வர வேண்டிய 21,760 கோடி ரூபாய் நிலுவைத் தொகை இதுவரை வரவில்லை. இந்த ஓராண்டு காலத்தில் இவ்வளவு சாதனைகளை செய்துள்ளோம் என்றால் இத்தகைய நிதிநெருக்கடியை பொறுத்துக்கொண்டு செய்து வருகிறோம். இப்படிப்பட்ட நிலையில்தான் நம்முடைய தி.மு.க. அரசு பல்வேறு வாக்குறுதிகளையும், நலத்திட்டங்களையும் நிறைவேற்றி சாதனை படைத்து வருகிறது. 

 

இவற்றை எல்லாம் கருப்பும் சிவப்பும் தங்கள் குருதியில் கலந்து ஓடக்கூடிய தி.மு.க. தொண்டர்கள், இந்த இயக்கத்தின் தீரர்கள், உடன்பிறப்புகள் வீடு வீடாக வீதி வீதியாக சென்று மக்களின் மனதில் விதைக்க வேண்டும். இதுதான் கழக உடன்பிறப்புகளின் கடமை." இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.