![ulundurpet missing gold and cash recovered by auto drivers](http://image.nakkheeran.in/cdn/farfuture/CUxu11goOUX1HwHjR2wBvcop5JutTMAXVePJp1j5swk/1682079677/sites/default/files/inline-images/auto-art.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரில் சென்னை, திருச்சி மற்றும் சேலம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் மும்முனை சந்திப்பு அருகில் தளபதி ஆட்டோ ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. இங்கு பல ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் ஆட்டோவை நிறுத்தி வைத்திருப்பதன் மூலம் வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இங்கிருந்து ஆட்டோ மூலம் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் பள்ளியன்தாங்கல் என்ற கிராமத்தைச் சேர்ந்த உஷா என்பவர் இங்குள்ள ஆட்டோ ஒன்றில் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் ஐந்து பவுன் நகை மற்றும் 5000 ரூபாய் பணம் ஆகியவற்றை ஒரு பையில் வைத்திருந்தார். அந்தப் பையை அவர் பயணம் செய்த ஆட்டோவில் தவறவிட்டு விட்டார். அதன் பிறகு தவறவிட்ட பையை தேடி பல இடங்களில் அலைந்துள்ளார்.
இதனையறிந்த தளபதி ஸ்டேண்ட் ஆட்டோ ஓட்டுநர்கள், உஷா தவற விட்ட அந்தப் பையை கண்டறிந்து அவர் பையில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தைப் பத்திரமாக மீட்டு அவரிடம் ஒப்படைத்தனர். தனது உடைமையை மீட்டுக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உஷா கண்ணீர் மல்க நன்றி கூறினார். ஆட்டோ ஓட்டுநர்களின் இந்த செயலை கண்டு பொதுமக்கள் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.