Skip to main content

யுடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வாலிபர்கள்; 2 நாள் காவலில் எடுத்து விசாரணை!

Published on 02/06/2022 | Edited on 02/06/2022

 

Two youngsters arrested in salem and investigating

 

யுடியூப் பார்த்து துப்பாக்கிகளை தயாரித்ததாக கைது செய்யப்பட்ட பட்டதாரி வாலிபர்கள் இருவரை, காவல்துறையினர் இரண்டு நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


சேலம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் நவீன் சக்கரவர்த்தி (24). பி.சி.ஏ படித்து வந்த இவர், இறுதியாண்டுடன் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு, ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். செவ்வாய்பேட்டையைச் சேர்ந்தவர் சஞ்சய்பிரகாஷ் (24). இவர், பி.இ., கணினி அறிவியல் முடித்துவிட்டு, ஒரு ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இருவரும் நெருக்கமான நண்பர்கள். 


கடந்து பத்து நாள்களுக்கு முன்பு, சேலம் & பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புளியம்பட்டி பகுதியில் ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா தலைமையில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் ஆகியோரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினர். 


அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் ஒரு கைத்துப்பாக்கி, ஒரு பெரிய துப்பாக்கி மற்றும் அதை செய்வதற்கான உபகரணங்கள் ஆகியவை இருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், சேலம் செட்டிச்சாவடியில் தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த வீட்டிலும் சோதனை நடத்தினர். அங்கிருந்து ஏராளமான கத்திகள், துப்பாக்கி செய்வதற்கான இரும்பு உருளைகள், ரம்பம், ஹாக்ஸா பிளேடு, டிரில்லர் மெஷின், முகமூடிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். 


விசாரணையில், பறவைகளையும், பொதுமக்களையும் பாதுகாப்பதற்காக யுடியூப் பார்த்து துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். இவர்கள், சேலம் அருகே செட்டிச்சாவடி பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். யுடியூப் பார்த்து, வீட்டிலேயே கள்ளத்தனமாக துப்பாக்கி தயாரித்து வந்துள்ளனர். இதையடுத்து, ஓமலூர் காவல்நிலைய காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். ஓமலூர் நீதிமன்ற உத்தரவின்பேரில், இருவரையும் சிறையில் அடைத்தனர். 


இந்நிலையில், இரண்டு நாள்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக காவல்துறையினர், இருவரையும் புதன்கிழமை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து, அவர்களை ஓமலூர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து, உள்ளூர் காவல்துறையினர் மட்டுமின்றி, கியூ பிரிவு காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். 


துப்பாக்கி தயாரித்ததன் நோக்கம் என்ன? தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளனரா?, வேலை இல்லாமல் இருந்து வந்த இவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவிகள் செய்தது யார் யார்?, ஏற்கனவே இதுபோன்ற ஆயுதங்களை தயாரித்து விற்பனை செய்துள்ளனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

முன்னாள் கவுன்சிலர் கொலை; கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள் சூறை!

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
Cuddalore Vandipalayam Former ADMK councilor Pushparajan incident

கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் புஷ்பநாதன் என்பவர் நேற்று இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உறவினர்கள், அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக நேதாஜி, சந்தோஷ் மற்றும் அஜய் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளை புஷ்பநாதனின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. முன் விரோதம் காரணமாக புஷ்பநாதனை மூன்று பேரும் சேர்ந்து கொலை செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியில் அதிமுக மாவட்டப் பிரதிநிதியும் முன்னாள் கவுன்சிலருமான புஷ்பநாதன் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், மறைந்த புஷ்பநாதன் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். இந்த ஆட்சியில் பொதுமக்கள், காவல்துறையினர், அரசியல் கட்சியினர் என யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை. புஷ்பநாதனை படுகொலை செய்தோரைத் துரிதமாகக் கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். 

Next Story

நோட்டமிட்ட கடப்பாரை திருடர்கள்; தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
Thieves of Noted Homes;viral cctv

கடலூரில் நள்ளிரவில் கடப்பாரையுடன் மர்ம நபர்கள் திருட முயன்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் கீழமணக்குடி பகுதியில் நள்ளிரவில் கடப்பாரையுடன் சில நபர்கள் கொள்ளையடிக்க முயற்சிப்பது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரைப் பிடித்த அந்த பகுதி மக்கள் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஊர் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து ஐந்து பேரையும் உட்கார வைத்திருக்கும் வீடியோ காட்சிகளும், கடப்பாரையுடன் கொள்ளை அடிப்பதற்காக வேவு பார்க்கும் சிசிடிவி காட்சிகளும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.