Skip to main content

எட்டு பேர் கொண்ட கும்பலால் வெட்டப்பட்ட இரு இளைஞர்கள்! கல்லூரி முன்விரோதம் காரணமா? 

Published on 17/11/2021 | Edited on 17/11/2021

 

Two young men attacked by Eight members police investigation

 

கும்பகோணத்தில் இரண்டு இளைஞர்களை வழிமறித்து எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டியது பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

 

கும்பகோணம் மகாவீர் நகரைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் யோகேஸ்வரன் (25). சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த குருபிரசாத் என்பவரின் மகன் நந்தகுமார் (22). நண்பர்களான இருவரும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிவருகின்றனர். இந்நிலையில், நேற்று (16.11.2021) இரவு இருவரும் கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் உள்ள லேப்டாப் சர்வீஸ் செண்டரில் தங்களது லேப்டாப்பை சர்வீஸ் செய்ய கொடுத்துவிட்டு, வீடு திரும்பியுள்ளனர். அப்படி திரும்பியபோது, சபரி நகர் அருகே 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்களைப் பின்தொடர்ந்துவந்து வழிமறித்து, கையில் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் இருவரையும் தாக்கியுள்ளனர். 

 

ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போவதை உணர்ந்ந இருவரும், மர்ம கும்பலிடமிருந்து தப்பிப்பதற்காக போராடி ஓடியுள்ளனர். ஆனாலும் அவர்களை அந்த கும்பல் விடாமல் விரட்டிச் சென்று யோகேஸ்வரனை சரமாறியாக எட்டு இடங்களில் வெட்டினர். அவருடன் சென்ற நந்தகுமாரையும் விடாமல் வெட்டியுள்ளனர். 

 

படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவலறிந்த யோகேஸ்வரனின் உறவினர்கள் 200க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். காவல்துறை துணை கண்காணிப்பாளர் (பொ) மோகன் தாஸ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். இதற்கிடையில் படுகாயமடைந்த யோகேஸ்வரன் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். 

 

இந்தக் கொலை முயற்சி குறித்து விசாரித்துவரும் போலீசார், “கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கல்லூரியில் நடந்த தகராறில் முன்விரோதம் ஏற்பட்டிருக்கிறது. அதனால், இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரித்துவருகிறோம்” என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.