![Two person in road incident; Condolences to the Chief Minister](http://image.nakkheeran.in/cdn/farfuture/q8DRosx4cXJUHOz9smaQ6aNeLR9vFNEafjAiCwPzNiw/1699292826/sites/default/files/inline-images/our-accident-with-logo_0.jpg)
விருதுநகர் மாவட்டம் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “விருதுநகர் மாவட்டம் செங்குன்றாபுரம் கிராமம், மூளிப்பட்டி விலக்கு அருகில் நேற்று (05.11.2023) அன்று மாலை மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம் முருகனேரி கிராத்தைச் சேர்ந்த பெண்கள். விவசாயப் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பி உள்ளனர். அப்போது செங்குன்றாபுரம் கிராமம் - மூளிப்பட்டி சாலையின் அருகில் அமர்ந்திருந்தனர். அப்போது அழகாபுரியில் இருந்து விருதுநகர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக தடம்மாறி பெண் தொழிலாளர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
இதில் மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், ஆறுமுகனேரி கிராமத்தைச் சேர்ந்த சோனைமுத்து மனைவி பேச்சியம்மாள் (வயது 55) மற்றும் பவுன்ராஜ் மனைவி முத்துச்செல்வி (வயது 42) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார்கள் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், ஆறுமுகனேரி கிராமத்தைச் சேர்ந்த 4 நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.
![Two person in road incident; Condolences to the Chief Minister](http://image.nakkheeran.in/cdn/farfuture/WLAFiOZqQ-ESuFP1Nn8aF0KfmN--sJAkgv3e6m9UK14/1699292856/sites/default/files/inline-images/cm-file-sad_14.jpg)
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நான்கு நபர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.