![Two people underwent kidney transplant today in Erode](http://image.nakkheeran.in/cdn/farfuture/GNvsr6L2hAsj7uigWQYDGzDzeYfdKj1lEGHdb19ubno/1713442867/sites/default/files/inline-images/Untitled-1_843.jpg)
ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் ஒரே நாளில் இரண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லோகராஜன் (21) என்ற வாலிபருக்கு, கடந்த 12ம் தேதி விபத்து ஏற்பட்டது. அதில் படுகாயமடைந்த அவர் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, அங்கு கடந்த 15ஆம் தேதி மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, லோகராஜனின் பெற்றோர், லோகராஜனின் உடல் உறுப்புகள் தானம் செய்ய விருப்பம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, லோகராஜனின் ஒரு சிறுநீரகம் தானம் பெறப்பட்டு, ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் 15 நிமிடத்தில் கொண்டுவரப்பட்டு, கடந்த 5 வருடங்களாக சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த முகமது அனிஷ்(29) என்பவருக்கு சிறுநீரகம் பொருத்தப்பட்டது. இதேபோல், தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றும் தங்கராஜ்(58) என்பவர், கடந்த 4 ஆண்டுகளாக சிறுநீராக செயலிழப்பு ஏற்பட்டு ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தங்கராஜியின் மனைவி சரோஜா (52), சிறுநீரகத்தை அவரது கணவருக்கு தானம் செய்ய விருப்பம் தெரிவித்தார். இதன்பேரில், சரோஜாவிடம் இருந்து சிறுநீரகம் தானம் பெறப்பட்டு, தங்கராஜிக்கு சிறுநீரகம் லேப்ரோஸ்கோப்பி மூலம் சிறிய துளை போடப்பட்டு, சிறுநீரகம் அறுவை சிகிச்சை செய்து மாற்றப்பட்டது.
இந்தச் சிகிச்சைகள், தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பின் ஆணைப்படி, ஒரே இரவில் இருவருக்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை சுமார் 12 மணி நேரம் அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், சிறுநீரக சிறப்பு மருத்துவர் டி.சரவணன் தலைமையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை நடைபெற்ற பின்பு நோயாளிகள் இருவரும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர் என டாக்டர் சரவணன் தெரிவித்தார்.